பெரம்பலூர், மார்ச் 22:
எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 26ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் வி.களத்தூர் உள்பட 31 மையங்களில் 9,416 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுத உள் ளனர். தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் (21ம் தேதி) வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இம்மாதம் 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 124 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்து 53 மாணவர்கள், 4 ஆயிரத்து 363 மாண விகள் என மொத்தம் 9 ஆயிரத்து 416 பேர் எழுத உள்ளனர். மேலும், பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பனிமலர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நேரடியாக விண்ணப்பித்த தனித்தேர்வர்களும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தட்கல் முறையில் விண்ணப்பித்த தனித்தேர்வர்களும் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்.
தேர்வுக்கான வினாத் தாட்கள் அனைத்தும் குறிப்பிட்ட மையத்திலிருந்து சிறப்பு அலுவலர்கள் மூலமாக அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் காலை 8 மணிக்கு உள்ளாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்துச் சென்று வழங்கப்படும்.
இதையொட்டி, 31 தேர்வு மையங்களுக்கும் தலா 2 போலீசார் வீதம் மொத்தம் 62போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், வினாத்தாள் இருப்பு மையத்திற்கும், விடைத்தாள் இருப்பு மையத்துக்கும் தலா 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதையொட்டி, தேர்வு மையங்களை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது, டிஆர்ஓ ராஜன்துரை, சப்& கலெக்டர் மதுசூதனன் ரெட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பாலு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எலிசபெத் ஆகியோர் நேரில் ஆய்வுசெய்ய உள்ளனர்.
இத்தேர்வு எழுதுவோரின் புகைப்படங்கள் இடம்பெற்ற விடைத்தாட்கள் இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில் மாணவ, மாணவிகளின் பெயர், பதிவு எண் ஆகியனவும் அச்சிடப்பட்டிருக்கும்.
இதனிடையே, தனித் தேர்வர்கள் தங்களது தேர்வுமைய நுழைவுச்சீட்டை இன்று முதல் (21ம்தேதி) வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்காக
என்ற இணைய தள முகவரியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இத்தேர்வுகள் முறைகேடுகள் இன்றி நடக்க ஏதுவாக சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வு மையங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களின் அருகே ஒலிபெருக்கி, தேவையற்ற சப்தம் போன்றவற்றால் ஏற்படும் இடையூறுகளை உடனுக்குடன் களையவும், போதிய பாதுகாப்பு வசதி செய்து தரவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 9,416 பேர் எழுதுகின்றனர்.
0 comments