அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க வலியுறுத்தி இ.யூ.முஸ்லிம் லீக் தூதுக்குழு பிரதமரை சந்திக்கும்-தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு.
அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க வலியுறுத்தி இ.யூ.முஸ்லிம் லீக் தூதுக்குழு பிரதமரை சந்திக்கும் – தேசிய செயற்குழு கூட்ட முடிவை விளக்கி இ.அஹமது, பேராசிரியர் கே.எம்.கே. பேட்டி
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், தமிழக முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை என்ற பெயரால் சித்ர வதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதைப் பற்றி மத்திய அரசின் கவனதிற்கு கொண்டு செல்லவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூதுக்குழு பிரதமரை சந்தித்து முறையிடுவது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று மே 11 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் அபூபேலஸ் நீலகிரி அரங்கில் நடைபெற்றது. தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ. அஹமது சாஹிப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசியப் பொருளாளர் கேரள அமைச்சர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி, தேசிய துணைத் தலைவர் உத்தரப் பிரதேச வழக்கறிஞர் இக்பால் அஹமது, தேசியச் செயலாளர்கள் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி., அப்துஸ்ஸமது ஸமதானி எம்.எல்.ஏ., டெல்லி குர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர், கொல்கத்தா சாஹின் ஷா ஜஹாங்கீர், மகாராஷ்டிரா ஷமீம் சாதிக், தேசிய துணைச் செயலாளர்கள் உத்தரப்பிரதேசம் எம். மத்தீன்கான், பெங்களூர் சிராஜ் இப்ராஹீம் சேட், ஆம்பூர் அப்துல் பாஸித், ராஜஸ்தான் சர்புதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல்ரஹ்மான் எம்.பி. மற்றும் அனைத்து மாநில தலைவர், செயலாளர்கள் விஷேச அழைப்பாளர்கள் உள்ளிட்ட 122 பேர்கள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தல்
கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில், பாசிச சக்திகளை வீழ்த்திட மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க முயற்சிப்பது என எடுக்கப்பட்ட முடிவை இச்செயற்குழு கூட்டம் மீண்டும் உறுதிபடுத்துகிறது. நாடாளுமன்ற தேர்தலை தேசிய அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சந்திக்க இ. அஹமது சாகிப் தலைமையில் 11 பேர் கொண்ட அரசியல் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம்லீக் பணிகளை தீவிரப்படுத்தவும், இயக்க நிர்வாகிகளுக்கு வரலாறு, அரசியல் மற்றும் அரசு நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்களை அறியச்செய்யும் நோக்கோடு நாடு முழுவதும் பயிலரங்கங்களை நடத்துவது என்றும், பெங்களுரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், ஆகிய 6 மண்டலங்களாக பிரித்து இவற்றை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
முஸ்லிம் விசாரணைசிறைவாசிகள்
அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிரந்தர நிவாரண உதவிகளைச் செய்ய தாரூல் ஹுதாவுடன் இணைந்து பணிகளை துரிதப்படுத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நீண்ட நாட்களாக விசாரணை சிறைவாசிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை மாவட்ட அளவிலான நீதிபதிகளை கொண்டு ஆய்வு செய்து விடுவிப்பதற்கு, மத்திய அரசு உரிய தாக்கீது பிறப்பித்தும் அதை மாநிலங்கள் செயல்படுத்தவில்லை. எனவே இந்த சிறைவாசிகள் விஷயத்தில் மத்திய அரசு நேரடி கவனம் செலுத்த வேண்டும். மேலும், சமீபத்தில் பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பந்தமாக தமிழ்நாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கர்நாடகக் காவல் துறையினரின் சித்ரவதைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் சிறைவாசிகள் விஷயமாக தேசிய தலைவர் இ. அஹமது தலைமையில் தேசிய நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தூதுக்குழு பிரதமரை சந்தித்து முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது.
வேலைவாய்ப்பு தேர்வுகளில்அரபு மொழி
மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான பொதுத் தேர்வுகளில் அரபி மொழி விருப்பப்பாடமாக இருந்தது. ஆனால் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அரபி உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் இனி விருப்பப்பாடமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது முஸ்லிம்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்தியாவில் பள்ளிக் கல்வியிலும், இளங்கலை முதுகலை படிப்புகளிலும், பல்கலைக் கழகங்களிலும் அரபி மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கான பட்டங்களை மேல்நிலை கல்வித்துறையும், இந்திய பல்கலைக்கழக வாரிய கவுன்சிலும், பள்ளிக்கல்வித்தேர்வு வாரியங்களும் அங்கீகரித்துள்ளன. இது 2010ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய பள்ளி கல்வி வாரியம் மற்றும் மாநில அரசுகளின் கல்வி வாரியங்கள் அனைத்தும் இந்த பட்டங்களை அங்கீகரித்திருக்கும்போது யூ.பி.எஸ்.சி.திடீரென அரபி மொழியை நீக்கியிருப்பது மத்ரஸா கல்வி மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது சாகிப் பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கியமுற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை மே 09 ம் தேதி நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். எனவே அந்த மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மீண்டும் அரபி மொழியை இடம்பெறச் செய்யுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று ஆய்வுகள் திரும்பத் திரும்ப தெரிவித்து வரும் நிலையில் அந்த வாய்ப்பை வழங்குவதற்கு நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்றும், நீதியரசர் ராஜேந்திர சச்சார் பரிந்துரைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் இ.அஹமது சாஹிப் வலியுறுத்தியதை இக்கூட்டம் கவனத்தில் எடுத்து மத்திய அரசு இக்கோரிக்கையை ஏற்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
சவூதியில் இந்தியர்கள்வேலைவாய்ப்பு
சவூதி அரேபியாவில் கொண்டு வரப்பட்டுள்ள நிதாகத் திட்டத்தின் மூலம் வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் இந்தியர்கள் ஏராளமானோர் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு உருவானதால் இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யுமாறு சவூதி அரசிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைமை நேரில் வலியுறுத்தியது இ.அஹமது சாகிப் மேற்கொண்ட இந்த முயற்சியின் பலனாக சவூதி அரசு இந்திய பணியாளர்கள் வேலை இழப்பதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது வரவேற்பிற்குரியது. சவூதியில் பணிபுரியும் இந்திய பணியாளர்களுக்கு எத்தகைய வேலை இழப்பும் ஏற்படாமல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள சவூதி அரசிடம் தங்கள் முழுமையான செல்வாக்கை தொடர்ந்து பயன்படுத்துமாறு மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இறுதியாக கூட்ட முடிவுகளை விளக்கி தேசிய தலைவர் இ. அஹமதுசாகிப், தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
நன்றி – மணிச்சுடர்
Category: சமுதாய செய்தி
0 comments