குன்னம் அருகே பரிதாபம் விஷம் குடித்த காதல் ஜோடி தற்கொலை!
குன்னம் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
காதல் ஜோடி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் சக்திவேல் (வயது 20) ஐ.டி.ஜ படித்துள்ளார். பெருமத்தூர் குடிக்காட்டை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகள் அனிதா (19). இவர் வேப்பூர் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவருடைய பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வனிதாவின் பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
பரிதாப சாவு
இந்நிலையில் நேற்று முன்தினம் வேப்பூர்–புதுவேட்டக்குடி சாலையில் சக்திவேலும், வனிதாவும் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள் அங்கு விரைந்து சென்று இருவரையும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரையும் தனித்தனியாக திருச்சிக்கு கொண்டு சென்று தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சக்திவேல் நேற்று காலையில் இறந்தார். அடுத்த சில மணி நேரத்தில் அனிதாவும் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்து குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்கு பதிவு செய்து இருவருடைய உடல்களையும் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார்.
இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Category: மாவட்ட செய்தி
0 comments