லப்பைக்குடிகாடு அரசு பள்ளி பெண் ஆசிரியரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் 3 பேருக்கு7 ஆண்டு சிறை தண்டனை!
பெரம்பலூர் அருகே பெண் ஆசிரியரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் 3 பேருக்கு பெரம்பலூர் கோர்ட்டில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வழிப்பறி வழக்கு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அத்தியூரை சேர்ந்தவர் பவுலின் மேரி. லப்பைக்குடிகாடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2007–ம் ஆண்டு ஜூன் மாதம் வேப்பூரில் இருந்து புதுவேட்டக்குடி இடையே மொபட்டில் சென்ற போது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பவுலின்மேரியை தாக்கி அவர் அணிந்திருந்த 9 பவுன் தாலிச்சங்கிலி, செல்போன், ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டது.
இந்த சம்பவம் குறித்து பவுலின்மேரி குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்டம் வல்லத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் (வயது 30), கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா செவ்வேரியை சேர்ந்த ரமேஷ் (32), திருவள்ளூர் மாவட்டம் காக்கனூர் தாலுகா தண்ணீர்குளத்தை சேர்ந்த மாணிக்கம் (28) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து பெரம்பலூர் சப்–கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
7 ஆண்டு சிறை
பின்னர் 3 பேரையும் இன்ஸ்பெக்டர் சோலைமுத்து, சப்–இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் பெரம்பலூர் சப்–கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி முகமது பாருக், ஆசிரியரை தாக்கி வழிப்பறி செய்த சம்பவத்தில் கொளஞ்சிநாதன், ரமேஷ், மாணிக்கம் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதத்திற்கு சிறைதண்டனை அனுபவிக்குமாறும் நீதிபதி தீர்ப்பு விதித்தார். இந்த தீர்ப்பை தொடர்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments