அரசு ஆஸ்பத்திரிகளில் துப்புரவு பணிகள் தனியாரிடம் ஒப்படைப்பு!
சென்னை, நவ. 11–
அரசு ஆஸ்பத்திரிகளில் துப்புரவு பணிகளை அரசு ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இந்த பணியில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்தாலும் துப்புரவு பணியை மேற்கொள்ள யாரும் ஆர்வமாக முன்வருவது இல்லை.
அப்படியே வந்தாலும் இந்த பணியில் தொடர்ந்து நீடிப்பது இல்லை. இதனால் காலிப் பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் முறையாக துப்புரவு பணி செய்யவில்லை என்றால் துர்நாற்றம் வீசுவதால் பொது சுகாதாரத்துக்கும் ஊறுவிளைவிக்கிறது.
அதனால் துப்புரவு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 200 படுக்கை வசதிக்கு மேலான அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் துப்புரவு ஊழியர்கள் நியமனம் தனியார் நிறுவனம் ஒன்றிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்வி இயக்கம் கட்டுப்பாட்டில் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முதல் கட்டமாக தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை துப்புரவு பணி ஏற்கனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 250 தனியார் ஊழியர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனை, சென்னை மனநல மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, வண்ணாரப்பேட்டை ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை.
ஓட்டேரி காசநோய் மருத்துவமனை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை ஆகிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த 1–ந்தேதி முதல் தனியார் ஊழியர் நியமிக்கப்பட்டனர்.
கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட மருத்துவமனைகளும், டி.எம்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள சில அரசு ஆஸ்பத்திரிகளிலும் வருகிற 15–ந்தேதி முதல் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
Category: மாநில செய்தி


0 comments