போலி ரேஷன் கார்டு வைத்திருப்போர் தமிழகத்தில் தான் அதிகம்! மத்திய அரசு அறிக்கை!
புதுடெல்லி: தமிழ கத்தில் போலி ரேஷன் கார்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது; போலி குடும்ப அட்டைகளை வைத்து பல பேர் மண்ணெண்ணை வாங்குகின்றனர் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 66,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் குறைத்து வழங்கியது. தற்போது தமிழகத்துக்கு 29 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நுகர்வோருக்கு மண்ணெண்ணை வழங்குவதில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியது. ஆனால் மத்திய அரசு மண்ணெண்ணை வழங்க மறுத்து விட்டது. இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், தமிழக அரசுக்கு ஏற்கனவே வழங்கி வந்த மண்ணெண்ணை ஒதுக்கீட்டை வழங்கக் கோரி பல முறை மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
ஆனால், மத்திய அரசு அதை கவனத்தில் எடுக்கவில்லை. மாறாக ஒதுக்கீட்டை குறைத்து வழங்கி வருகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்துக்கு ஏற்கனவே வழங்கி வந்த மண்ணெண்ணை ஒதுக்கீட்டை மீண்டும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநிலங்களில் சமையல் எரிவாயுவைபயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன்காரணமாக மண்ணெண்ணை ஒதுக்கீட்டின் அளவை 40 சதவீதம் குறைத்து மத்திய அரசு வழங்கி வருகிறது.
தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் அதிக எண்ணிக்கையில் புழக்கத்தில் உள்ளது. போலி ரேஷன்கார்டுகளைப் பயன்படுத்திமண்ணெண்ணை வாங்குபவர்கள் அதிகரித்துள்ளனர். இதனால், பயனாளிகளுக்கு உரிய முறையில் மண்ணெண்ணை கிடைக்கவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால்தான் ஒதுக்கீட்டின் அளவை குறைத்து வழங்கினோம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ததற்கு தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
Category: மாநில செய்தி
0 comments