பெரம்பலூர் பேருந்தில் பெட்ரோல் குண்டு வெடிப்பு: தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை!
பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை இரவு தனியார் பேருந்தில் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்த சம்பவம் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூரிலிருந்து துறையூருக்கு வியாழக்கிழமை இரவு தனியார் பேருந்து ஒன்று, 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது, ஈச்சம்பட்டி பங்களா பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பேருந்தின் முன்பக்க படிக்கட்டிலிருந்து மர்ம பொருள் ஒன்று வெடித்தது. இதில் காயமடைந்த 9 பயணிகளும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த, திருச்சி மத்திய மண்டல ஐஜி ராமசுப்பிரமணி, டிஐஜி செந்தாமரைக்கண்ணன், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பிளாஸ்டிக் பாட்டிலில் எளிதில் தீப்பற்றி வெடிக்கூடிய திரவங்களை பெட்ரோலில் கலந்து நிரப்பி, அத்துடன் பேட்டரி மற்றும் வயர் சர்க்யூட் இணைத்து டைம் பாம் வடிவில் அமைக்கப்பட்ட வெடிகுண்டை பையில் வைத்து எடுத்துச் சென்றபோது வெடித்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, இதுபோன்ற வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் பயன்படுத்துவதில்லை. அவர்கள் தயார் செய்யும் வெடிகுண்டுகளில் டெட்டனேட்டர்கள் இணைக்கப்பட்டு, பயங்கர சப்தத்துடன் வெடிக்கும். ஆனால், இந்த வகை வெடிகுண்டு தமிழகத்தில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது லேசான சப்தத்துடன் வெடிக்கும் வகையிலும், வெடித்தவுடன் அதில் நிரப்பப்பட்டிருக்கும் திரவம் மூலம் தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறும் வகையிலும் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த வெடிகுண்டு முறையாக வெடிக்காததால்
உயிரிழப்பு சம்பவங்களோ, பேருந்துக்கு எவ்வித சேதமோ ஏற்படவில்லை எனக் கூறுகின்றனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பேருந்தில் இருந்த பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணையில் ஈடுபட்டு வரும் போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை: பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை இரவு பேருந்தில் பெட்ரோல் குண்டு வெடித்ததில் காயமடைந்தவர்களுக்கு திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஏ.கே.என். அசோகன் கூறினார்.
Category: மாவட்ட செய்தி



0 comments