மாதத்துக்கு ஒன்றுதான் என்ற கட்டுப்பாடு நீக்கம்; 12 சமையல் கியாஸ் சிலிண்டர்களை பெறுவதில் புதிய சலுகை மத்திய மந்திரிசபை முடிவு!
புதுடெல்லி,
மாதத்துக்கு ஒரு சிலிண்டர்தான் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டது. ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு புதிய சலுகை அளித்துள்ளது.
கட்டுப்பாடு
நாடு முழுவதும், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 9 வீதம் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், முந்தைய மன்மோகன்சிங் அரசு, கடந்த பிப்ரவரி 28-ந் தேதி இந்த எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியது.
அதே சமயத்தில், ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்று கட்டுப்பாடு விதித்தது.
இந்த கட்டுப்பாட்டால், சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க நேரிட்டது.
புதிய சலுகை
இந்நிலையில், இந்த கட்டுப்பாட்டை மத்திய அரசு நேற்று நீக்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, இனிமேல், ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அவரவர் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
பேட்டி
மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவு பற்றி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
ஆண்டுக்கு 9 சிலிண்டர்களாக இருந்ததை முந்தைய அரசு 12 சிலிண்டர்களாக உயர்த்தியது. இருப்பினும், ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் மட்டுமே பெற முடியும் என்று கட்டுப்பாடு விதித்தது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
ஒரு சில மாதங்களில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிலிண்டர் கூட தேவைப்படாது. ஆனால், பண்டிகை காலங்களில் ஒரே மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர்கள் தேவைப்படும். ஆனால், அவர்களால் அதை பெற முடியாத நிலை இருந்தது.
மேலும், ஒரு குறிப்பிட்ட மாதத்துக்குரிய சிலிண்டரை பெற தவறியவர்கள், அடுத்து வரும் மாதங்களில் அந்த சிலிண்டரை பெற முடியாத நிலை இருந்தது.
இஷ்டம் போல..
எனவே, வாடிக்கையாளர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, இந்த கட்டுப்பாட்டை நீக்குவது என்று மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது. இனிமேல், அவர்கள் ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை தங்கள் தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் சிரமங்களை போக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
12 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுபவர்கள், வழக்கம் போல, அதை சந்தை விலைக்கு வாங்க வேண்டும்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
பங்கு விற்பனை முடிவு ஒத்திவைப்பு
ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, என்.எச்.பி.சி. ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.40 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வெளியூர் சென்றிருப்பதால், இந்த பங்கு விற்பனை யோசனை, மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அம்முடிவு ஒத்தி வைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ஜப்பான் செல்ல உள்ளார். அப்போது, சுகாதார துறையில் உறவை மேம்படுத்துவது தொடர்பாக ஜப்பானுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
Category: மாநில செய்தி
0 comments