விவசாயத்திற்கு பயன்படும் நவீன நானோ டிராக்டர்! நாகை தனியார் பொறியியல் மாணவர்கள் வடிவமைப்பு!
தரங்கம்பாடி, ஜூலை 9:
தரங்கம்பாடி ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நாகப்பட்டினம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் விவசாயத்துக்கு பயன்படும் நானோ டிராக்டரை வடிவமைத்துள்ளனர்.
தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் ரிசர்ச் பவுன்டேஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜெயராஜ் மற்றும் முரளி ஆகியோருடன் இணைந்து நாகப்பட்டினம் தனியார் பொறியியல் கல்லூரியின் இறுதியாண்டு இயந்திரவியல் மாணவர்கள் தரங்கம்பாடியைச் சேர்ந்த ஷேக் அமினுதீன் தலைமையில் சதாம் நாசிப் மற்றும் விக்னேஷ் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இப்புதிய கண்டுபிடிப்பு பற்றி மாணவர்கள் கூறியதாவது : நாங்கள் வடிவமைத்துள்ள இந்த புதிய வகை நானோ டிராக்டர் மிகவும் சிறியது. இதனை இயக்குவது மிக சுலபமானது. மொத்த எடை 300 கிலோ மட்டுமே. ஏழை விவசாயிகள் சிறிய அளவிளான நிலத்திற்கு டிராக்டர் மூலம் உழவு செய்ய வசதியற்ற நிலையில் உள்ளனர். இன்று மாடுகளை பயன்படுத்தி உழவு செய்வது என்பது சற்றே கடினமாக உள்ளது. மேலும் விவசாயம் செய்ய வேண்டிய வயல் நடுவில் இருக்க சுற்றியுள்ளவர்கள் விவசாயம் செய்து விட்டால் நடுவில் உள்ளவரால் டிராக்டர் பயன்படுத்தி உழவு செய்ய முடியாமல் விவசாயமே செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இதனை தவிர்க்க தான் எங்களின் இந்த நானோ டிராக்டர். இன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று உயரிய நோக்கில் தங்கள் கவனத்தை செலுத்துவதால் மக்கள் நெருக்கடி மற்றும் மனித சக்தி பெரு நகரங்கள் பக்கம் சென்று விடுகிறது. நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் கேள்விக்குறியாகி போதிய மனித சக்தியில்லாமல் உள்ளது. நம் மூதாதையர்கள் செய்து வந்த விவசாய தொழில் நலிவடைந்தது மட்டுமில்லாமல் வடிவமே மாறிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு எங்கள் குழு தீவிர முயற்சிக்குப்பின்னர் இதை வடிவமைத்துள்ளோம்.
இதற்கு 110 சிசி திறன் உள்ள இன்ஜினை பயன்படுத்தியுள்ளோம். நான்கு சக்கரங்களின் உதவியுடன் இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். பின்புறம் உள்ள இருசக்கரங்கள் இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது. 4 கியர்களை கொண்டு இயங்கும் வகையில் வடிமைத்துள்ளோம். மிக எளிதாக இயக்கலாம். வயல்களில் டிராக்டர்களைப் போன்றே இயங்கக்கூடியது.
இதன் பின்புறச்சக்கரங்களுடன் கேஜ் வீல் என்பதை இணைத்துள்ளோம். இதனை சக்கரங்களுடன் இணைப்பது மிக எளிது. இங்கு நாங்கள் இறுக்கமான கிளிப் ஒன்றை பயன்படுத்தியுள்ளோம். இதன் மூலம் கேஜ் வீலை எளிதில் கையாளலாம். மற்ற டிராக்டர்களில் கேஜ் வீல் பொருத்துவது மிகவும் கடினம். இதனை எளிதில் இயக்கி எரிபொருள் செலவை குறைக்கவும், அதே நேரத்தில் சுற்றுப்புறத்தை பாதுகாக்கவும் முடியும். டீசல் வாகனங்களை பயன்படுத்துவதால் தான் சுற்றுப்புறச்சூழல் வெகுவாக பாதிப்படைகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு எங்கள் வாகனம் இருக்கும். எங்கள் வாகனத்தின் தயாரிப்பு செலவு ரூ.30,000 மட்டுமே. இதற்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் கண்டுபிடிப்பிற்கு உரிய உதவியை மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கினால் மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் ரிசர்ச் பவுன்டேஷன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியின் இறுதியாண்டு இயந்திரவியல் மாணவர்கள் வடிவமைத்துள்ள நவீன நானோ டிராக்டர். அருகில் மாணவர்கள்.
Category: மாணவர் பகுதி


0 comments