ரமலான் சிந்தனைகள் !
* “அருள் நிறைந்த ரமலான்“ இறைவனின் அருளை அள்ளிக் கொண்டு வருகிறது.
* ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கும் உடல் உறுப்புக்களின் பராமரிப்பு தினங்களே ரமலானின் நாட்களாகும்.
* சாப்பிடாமல், குடிக்காமல், இச்சையின்றி இருக்கிற இறைவனின் தன்மைகளை கொஞ்சம் நாமும் முயற்சிசெய்து, அந்த இறைவனின் அன்பை பெற்றுக்கொள்ள ரமலான் துணை செய்கிறது.
* ஒவ்வொரு ரமலானும் நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். “கடந்த ஆண்டின் ரமலானை நாம் அடைந்த பின்பு நம் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன“ என்று கொஞ்சம் மனக்கண்ணில் ஓடவிட்டு பாருங்கள்.
* “பசித்திரு(நோன்பு), விழித்திரு(தராவீஹ்), தனித்திரு(இஃதிகாஃப்)“ இவையே ரமலானின் தாத்பரியமாகும்.
* ஒரு முஸ்லீம், ரமலான் மாத வணக்கங்களின் மூலம் சுயகட்டுப்பாட்டை கற்றுக்கொள்கிறார்.
* ரமலான் மாதம், மாதங்களின் இதயம். அது சரியானால் அனைத்தும் சரியாகும்.
* பன்னிரண்டு மாதங்கள், நபி யாகூப் (அலை) அவர்களின் 12 பிள்ளைகள் போன்றது. இக்குழந்தைகளில் யூஸூப் நபி மீது தந்தை யாகூப் அலை அவர்களுக்கு எந்தளவு பிரியம் உண்டோ அதைபோல் 12 மாதங்களில் ரமலான் மீது இறைவனுக்கு பிரியம் உண்டு.
* “12 மக்களில் ஒருவரான யூஸூப் நபியின் துஆவால் எப்படி மற்றபிள்ளைகள் இறைவனின் மன்னிப்பை பெற்றார்களோ அவ்வாறே ரமலானின் அருளால் மற்ற மாதங்களில் செய்த பாவங்களும் மன்னிக்கப்படும்“ என்று அல்லாமா இப்னுல் ஜவ்ஸி ரஹ் கூறுகிறார்கள்.
* ரமலான் கிடைப்பதற்கு அரிதான ஒரு மாபெரும் செல்வமாகும், கடந்த ஆண்டு நம்முடன் ரமலான் சந்தித்த சிலர் இவ்வாண்டு மண்ணறையின் மக்களாக ஆகிப்போனார்கள். சென்ற ஆண்டு ஆரோக்கியமாக ரமலானை சந்தித்தவர்கள் சிலர் இவ்வாண்டு நோயின் கோரப்பிடியில் அகப்பட்டுக்கொண்டார்கள். “இதுவே கடைசி ரமலானாக இருக்கலாம்“ என்பது யாருக்கு தெரியும்?
* நம்முடைய முன்னோர்கள் ரமலானுக்காகவே வாழ ஆசைப்பட்டிருக்கிறார்கள். ஆண்டு முழுவதையும் ரமலானாக வாழ்ந்த அந்த பெருமக்களுக்கு மத்தியில் ஆண்டுக்கு ஒரு ரமலானையாவது தன் மறுமைக்கு பயனுள்ளதாக கழிக்கத் தவறியவர்கள் பற்றி என்ன சொல்வது?
* நீண்ட நாட்கள் எதிர்பார்த்த ஒரு தம்பதியருக்கு இறைவன் குழந்தையை வழங்கினால் அவர்கள் அந்த குழந்தையை எவ்வளவு எதிர்பார்த்திருப்பார்களோ அந்தளவு நபித்தோழர்களும் அவரை சார்ந்தோரும் ரமலானை எதிர்பார்த்திருப்பார்களாம்.
* இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான நோன்பு, இறைவன் இந்த விசுவாசிகளுக்கு தந்த விலைமதிக்க முடியாத செல்வமாகும். அதன் மூலம் ஒரு முஸ்லீம் தன் உடல் மற்றும் மனரீதியான வலிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
* நோன்பின் மாண்புகள் பற்றியும், சட்டங்கள் பற்றியும் சமுதாயம் நிறைய தெரிந்து வைத்திருக்கிறது. நோன்பு விஷயத்தில் நாம் தெரிய வேண்டிய மிக முக்கியமான ஒரு செய்தி உண்டு. அது என்னவெனில் அதன் நோக்கம் ஆகும். பொதுவாக இறைவனால் கடமையாக்கப்பட்ட எந்த வணக்கமானாலும் அதற்கு நோக்கம் அவசியமாக இருக்கும். காரணமின்றி காரியமாற்றச் சொல்லும் வழக்கம் இறைவனுக்கு கிடையாது. அப்படிப் பார்க்கப்போனால் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னணியிலும் ஒரு அழுத்தமான காரணமுண்டு என்பதை நாம் மறுக்க முடியாது. அதை இறைவன் இவ்வாறு விவரிக்கின்றான்.
நோன்பின் நோக்கம் இறைவன் இறையச்சம்
“ விசுவாசம் கொண்டவர்களே! உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல, உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. காரணம் நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக மாற வேண்டும் என்பதற்காக“ என இறைவன் கூறுகிறான்.
* இங்கு இன்னொரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக இறைவன் ஒரு கடமையை செய்ய சொல்லும் போது அதன் நோக்கத்தையோ அல்லது காரணத்தையோ குறிப்பிட மாட்டான்.
* தொழுகை, ஜகாத்(தர்மம்), ஹஜ் போன்ற இறைவனால் கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் செய்வதற்கு இறையச்சம் வேண்டும். அந்த இறையச்சத்திற்கு நோன்பு வேண்டும். இறைவனின் மீது அச்சம் இருந்தால் தான் அமல் செய்யும் ஆர்வம் உண்டாகும்.
அந்த அச்சம் உண்டாக நோன்பு ஒரு பயிற்சியாக அமைகின்றது, இந்த அடிப்படையில் நோன்பு என்பது உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, மாறாக அது உள்ளத்துடன் விசேஷ தொடர்புடையது.
Category: சமுதாய செய்தி


0 comments