ஹஜ் பயணம்: தமிழகத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்க பிரதமருக்கு ஜெ. கடிதம்!!
சென்னை: தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி 2014ம் ஆண்டுக்காக இதுவரை 13 ஆயிரத்து 159 விண்ணப்பங்களை பெற்றுள்ளது. முஸ்லீம் சமுதாய மக்கள்தொகையின்படி, இந்திய ஹஜ் கமிட்டி குழு நடப்பாண்டில் தமிழகத்துக்கு 2,672 இடங்களை ஒதுக்கியுள்ளது. இதில் 1,180 இடங்கள் சிறுபான்மையினருக்கும், 1,492 இடங்கள் பொதுபிரிவினருக்கும் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஹஜ் கமிட்டி மூலம் கூடுதலாக 100 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளின்போது, முஸ்லீம் மக்களின் நலன் கருதி, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டது என்பதை நான் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடந்த ஆண்டில், 3,696 யாத்ரிகர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டனர். இது நடப்பாண்டில் புனித பயணம் மேற்கொள்வதற்காக விண்ணப்பம் அளித்துவிட்டு காத்திருப்போர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய அரசு, நடப்பாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும். இதனால் ஏராளமானோர் பயன்பெறுவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Category: சமுதாய செய்தி, மாநில செய்தி
0 comments