18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
புதுடெல்லி, ஜூலை 18.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. 2015க்குள் தங்களது ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 18000 பேரை குறைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது தகவல் தொழில்நுட்ப துறையில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நோக்கியா நிறுவனத்தில் பணிபுரியும் 12500 ஊழியர்களுக்கு வேலை நீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாடெல்லா ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உற்பத்தி மற்றும் அடித்தளத்தை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். அடுத்து வர உள்ள ஆறு மாதங்களில் படிப்படியாக இந்த ஊழியர்கள் தங்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தில் மாற்றம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியுள்ள நாடெல்லா, ஆனால் எவ்வித மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன என்று வெளிப்படையாக தெரிவிக்க மறுத்துவிட்டார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த முடிவின் மூலம் ஐ.டி. துறையின் எதிர்காலம் குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Category: மாநில செய்தி


0 comments