வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா?
வெளிநாட்டு வாழ்க்கையால்
பொருளாதாரம்
பெருகுகிறது, வசதிகள்
அதிகரிக்கின்றன,
வாழ்க்கைத்தரம் உயருகிறது,
மேலும் ஹஜ், உம்ரா மற்றும்
ஜியாரத் போன்ற வணக்கங்களைத்
தம்
தாய்நாட்டிலிருந்து வந்து
நிறைவேற்றுவதில்
இருக்கக்கூடிய சிரமமும்
பணச்செலவும் கணிசமாகக்
குறைவதால் குறிப்பாக
வளைகுடாவில்
வேலை செய்பவர்கள் குறைந்த
தூரமே பயணித்து அதிகம்
பயனடைகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல்
இவர்களின் உறவினர்களில்
பெரும்பாலோர் -
குறிப்பாகப் பெற்றோர்கள்,
பிள்ளைகள், உடன்
பிறந்தவர்கள் மற்றும் இரத்த
பந்தங்களில் அதிகமானவர்கள்
மேற்சொன்ன வணக்கங்களுக்காக
இங்குள்ளவர்களின் உதவியால்
அழைத்து வரப்பட்டுப்
பயனடைகின்றனர் என்பதும்
மறுக்க முடியாது.
ஆனால் மேற்சொன்னவற்றில்
பயன்கள் மற்றும் இலாபம்
இருந்தாலும்,
அவற்றோடு நஷ்டமும்
குறைபாடுகளும் அதிகமாக
இருக்கின்றன என்பதும்
உண்மையாகும்.
அவற்றை ஒருவரியில்
கூறாமல் பட்டியலிட்டுக்
கூறுவது பொருத்தமாக
இருக்கும்.
1. பெற்றோருக்கு செய்யும்
கடமைகளில் குறைபாடு
பொதுவாக 20 வயதில்
வெளிநாட்டு வாழ்க்கையில்
அடியெடுத்து வைக்கக்கூடிய
ஒரு மனிதர் குறைந்த பட்சம்
இரண்டு வருடங்கள், ஆகக்
குறைந்த பட்சமாக
ஒரு வருடமாவது
பெற்றோரைப்
பிரிந்து வாழவேண்டிய
சூழ்நிலையில் இருக்கிறார்.
இந்த ஒன்று / இரண்டு வருட
வாழ்க்கையில்
பெற்றோருக்குச் செய்ய
வேண்டிய கடமைகளில்
பெரும்பாலானவற்றைச் செய்ய
தவறிவிடுகிறார். இந்தக்
காலங்களில்
எத்தனை தலைவலிகள்,
வயிற்றுவலிகள், இனிப்புநீர்
அதிகரிப்பால்
அல்லது குறைவால்
அவதிப்படுதல், மாரடைப்பு,
சமீப காலங்களில் ஆட்டிப்
படைத்த
சிக்கன்குனியா மற்றும்
இவற்றில் குறிப்பிடாத
இன்னபிற வியாதிகளால்
பாதிக்கப்பட்டு
அவதிக்குள்ளாகக்கூடிய
நேரத்தில் தன்
பெற்றோரை மருத்துவரிடம்
கொண்டு செல்ல,
பணிவிடை செய்ய என
எத்தனை பேர்களுக்கு
வாய்ப்பு
கிடைத்திருக்கிறது என்று
கணக்குப் பார்த்தால்
எஞ்சுவது மிக மிகக்
குறைவு.
இதைவிடப் பெற்றோரின்
மரணத்தின்பொழுது, ஜனாஸாத்
தொழுகை மற்றும்
நல்லடக்கத்தின்
பொழுது உடனிருந்தவர்கள்
எத்தனை பேர்?. தனது தாயின்,
தந்தையின்
கடைசி மூச்சினைக் காண
கிடைக்கவில்லையே என
எத்தனை உள்ளங்கள்
ஏங்கி இருக்கும்?. அதேபோல்
தனது கடைசி மூச்சு, தான்
பெற்ற மக்களுக்கு மத்தியில்
நிகழவேண்டும்
என்று எத்தனை பெற்றோர்களின்
உள்ளங்கள் நினைத்திருக்கும்?
அதற்கெல்லாம்
சாவு மணி அடிக்கிறது இந்த
வெளிநாட்டு வாழ்க்கை.
பெற்றோருக்கு நன்றி
செலுத்துவது, உபகாரம்
புரிவது மற்றும்
அல்லாஹ்விற்கு மிகப்
பிரியமான அமல்கள்
யாவை என்பது குறித்து
அல்லாஹ்வின் வேதமும்
நபிமொழியும் என்ன
சொல்லுகின்றன என்பதைப்
பார்ப்போம்:
"நாம் மனிதனுக்கு, தன்
பெற்றோர் (இருவருக்கும்
நலன் நாடுவது)
பற்றி வஸிய்யத்துச் செய்
(து போதித்)தோம். அவனுடைய
தாய் பலஹீனத்தின் மேல்
பலஹீனம் கொண்டவளாக
(கர்ப்பத்தில்) அவனைச்
சுமந்தாள். இன்னும்
அவனுக்குப் பால்
குடி மறத்தல்
இரண்டு வருடங்கள் ஆகும்.
ஆகவே, நீ எனக்கும், உன்
பெற்றோர்க்கும்
நன்றி செலுத்துவாயாக;
என்னிடமே உன்னுடைய மீளுதல்
இருக்கிறது" (அல்குர்ஆன் 31:
14).
அப்துல்லாஹ் பின்
மஸ்வூது(ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்: நான்
நபி(ஸல்) அவர்களிடம்
"செயல்களில்
அல்லாஹ்விற்கு மிகப்
பிரியமானது எது?"
என்று கேட்டேன். அதற்கவர்கள்,
"தொழுகையை அதற்குரிய
நேரத்தில் தொழுவதாகும்"
என்றார்கள். "பின்னர் எது?"
என்று கேட்டேன். அதற்கு,
"பெற்றோருக்கு நன்மை
செய்வதாகும்" என்றார்கள்.
(ஹதீஸின் ஒரு பகுதி)
(புகாரி, முஸ்லிம்)
இப்படியாக
பல்வேறு சிறப்புகளையும்,
மகத்துவத்தையும்
பெற்றிருக்கக்கூடிய
பெற்றோர்களில் ஒருவரான
தாயின்
சிறப்பை மேன்மைப்படுத்தி
சிலாகித்துக் கூறக்கூடிய
மேலும் சில
நபிமொழிகளையும் காண்போம்.
ஒரு மனிதர் நபி(ஸல்)
அவர்களின்
சமுகத்திற்கு வந்து,
"அல்லாஹ்வின் தூதரே! என்
அழகிய
தோழமைக்கு மனிதர்களில்
அதிக உரிமை பெற்றவர்
யார்?" என வினவினார்.
அதற்கு அண்ணல் நபி(ஸல்)
அவர்கள், "உம் தாய்" என்றார்கள்.
"பின்னர் யார்?" என அவர்
வினவினார். அதற்கவர்கள், "உம்
தாய்" என்றார்கள். "பின்னர்
யார்?" என அவர் வினவினார்.
அப்பொழுதும் "உம் தாய்" என
அண்ணல் நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள் "பின்னர் யார்?"
என்றார் அப்பொழுது, "உம்
தந்தை" எனக் கூறினார்கள்.
(புகாரீ: 5514)
"வயது முதிர்ந்த தன்
பெற்றோர் இருவரையோ அல்லது
ஒருவரையோ பெற்றிருந்தும்
(அவர்களின் நலன் நாடாமல்
புறக்கணித்து) சுவனம்
செல்லாமல் போய்விட்ட மனிதன்
நாசமடைவானாக! பின்னர்
நாசமடைவானாக! பின்னர்
நாசமடைவானாக!" என
நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (முஸ்லிம்)
அறிவிப்பாளர்:
அபூஹூரைரா(ரலி) அவர்கள்.
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள்
மற்றும் ஹதீஸ்கள் மிக
தெளிவாக விளக்குகின்ற
செய்தி யாதெனில்,
பெற்றோருக்குப்
பணிவிடை செய்வதும்
நன்றியுடையவர்களாக
இருப்பதுமாகும்.
பெற்றோருக்குப்
பணிவிடை செய்யக்கூடிய
விஷயத்திலாவது
பெற்றோருக்கு ஒருவருக்கு
மேற்பட்ட மக்கள்
இருந்து அவர்களில்
ஒருவரோ அல்லது
அதிகமானோரோ பெற்றோருடன்
இருந்து மற்றவர்கள்
வளைகுடா வாழ்க்கையின்
மூலம் கிடைக்கக்கூடிய
வருமானத்தை அனுப்பிக்
கொடுத்து ஊரில்
இருக்கக்கூடிய மற்ற மக்கள்
மூலம்
கவனிக்கப்படுகிறார்கள்
என்றால்
ஓரவிற்கு ஜீரணித்துக்
கொள்ளலாம். ஆனால்
அடுத்து நாம் பார்க்க
இருக்கின்ற பாதிப்புகள்
குறித்து வருந்தாமல்
இருக்கமுடியவில்லை.
2. கணவன் மனைவிக்கும்,
மனைவி கணவனுக்கும் செய்ய
வேண்டிய கடமைகள்
திருமணம் முடித்த
எத்தனையோ வாலிபர்கள்
மற்றும் இளம் பெண்கள்
வயிற்றைக் கழுவ
வெளிநாட்டிற்கு தஞ்சம்
புகுந்துள்ளார்கள்.
அவர்களில் எத்தனை பேர்
திருமணம் என்ற பந்தத்தின்
மூலம் இல்லற
வாழ்க்கையை முழுமையாக
அனுபவித்தவர்கள்? திருமணம்
முடித்த ஒரேநாளில்,
ஒரேவாரத்தில்,
ஒரே மாதத்தில் என
எத்தனை சகோதர-சகோதரிகள்
திருமண
பந்தத்திற்கு முன்னாலேயே
வெளிநாட்டிற்கு வாழ்க்கைப்
பட்டதால் பிரிய
மனமில்லாமல் வாழ்க்கைத்
துணையைப்
பிரிந்து செல்கிறார்கள்.
கணவன், மனைவிக்கு மற்றும்
மனைவி,
கணவருக்கு செய்யவேண்டிய
கடமைகளை முறையாக,
முழுமையாக
நிறைவேற்றுகின்றார்களா
என்றால் அது மிக சொற்பமே.
குறிப்பாக, திருமணம்
முடித்த நாளிலிருந்து 20
வருடகாலம் வெளிநாட்டில்
வாழ்க்கைப் படகினை ஒருவர்
ஓட்டியிருப்பாரேயானால்
அவரது இல்லறவாழ்வின் காலம்
எத்தனை எனச் சராசரியாகக்
கணக்குப் பார்த்தால்
அது குறைந்தபட்சம் 24
மாதமும் அதிகபட்சமாக 48
மாதமுமாகும். அதாவது 2
வருடம் முதல் 4 வருடம்
மட்டுமே.
இளமையில் பெறவேண்டிய
சுகத்தை அடையவிடாமல்
பொருள் சுகம் தடுக்கிறது.
சும்மா இருந்த சங்கை ஊதிக்
கெடுத்தக் கதையாக,
வருடத்தில்
அல்லது இரண்டு வருடத்தில்
ஒன்று முதல் ஆறு மாதங்கள்
வரை நாட்டிற்குச்
சென்று மனைவியிடம் இல்லற
வாழ்க்கையில்
ஈடுபடக்கூடியவர்கள்
வெளிநாட்டிற்கு திரும்ப
வேண்டிய நாட்கள் நெருங்க
நெருங்க இருவர் மத்தியில்
ஏற்படக்கூடிய தாக்கங்கள்
ஏக்கங்களை வார்த்தைகளால்
கூற முடியாது.
அதனை உணர்ந்தவர்கள்
அனைவரும் அறிவர்.
அடுத்து வரக்கூடிய
விடுமுறை வரைக்கும்
இருவருக்கும் இல்லறமென்ற
நல்லறம் கிடையாது.
உள்ளத்தில் புரண்டெழும்
ஏக்கங்களை எழுத்திலும்
(கடிதத்திலும்), பேச்சிலும்
(தொலைபேசியிலும்)
பறிமாறிக் கொள்ள
வேண்டியதுதான்.
இந்த இடைப்பட்ட கால
இடைவெளியில்
இறையச்சத்தைப்
பெற்றிருக்கின்ற நல்லுள்ளம்
கொண்ட சகோதர,
சகோதரிகளைத் தவிர
மற்றவர்கள் ஒரு சில
சந்தர்ப்பங்களில் அந்நிய
ஆடவர்களோடு பழகக்கூடிய
சூழ்நிலையால்
வழிதவறிவிடாமல்
இருக்கவும் வெளிநாட்டில்
இருக்கக்கூடிய ஆடவர்கள்
அந்நியப்
பெண்களோடு பழகக்கூடிய
சூழ்நிலையால்
வழிதவறிவிடாமல்
இருக்கவும் அல்லாஹ்
பாதுகாக்க வேண்டும்
என்று பிரார்த்தித்தவனாக
வழிதவற வாய்ப்புகள் உள்ளன
என்பதையும் இவ்விடத்தில்
கூறிக் கொள்ள
விரும்புகிறேன்.
இதற்கெல்லாம் காரணம்
வெளிநாட்டு வாழ்க்கை
ஏற்படுத்திய பிரிவுதான்.
கணவன்-மனைவி மத்தியில்
உரிமைகள் வழங்குதல்
குறித்து நபி(ஸல்)
அவர்களின்
போதனையினை இரத்தினச்
சுருக்கமாக ஒன்றைக்
கூறினால் இவ்விடத்தில்
பொருத்தமாக இருக்கும் என
நினைக்கிறேன்.
அபூ ஜுஹைபா வஹப் பின்
அப்தில்லாஹ்(ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். நபி(ஸல்)
அவர்கள், ஸல்மான்(ரலி)
அவர்களுக்கும்
(அன்ஸாரியான)அபூதர்தா(
ரலி) அவர்களுக்கும்
மத்தியில் சகோதரத்
தோழமையை ஏற்படுத்தினார்கள்
. ஸல்மான்(ரலி) அவர்கள்
அபூதர்தா(ரலி)வைச்
சந்தித்தார்கள்.
அப்பொழுது (அவர் மனைவி,
உம்முதர்தா(ரலி)
(சாதாரண)பழைய
ஆடை அணிந்திருப்பதை
ஸல்மான்(ரலி) அவர்கள்
பார்த்தார்கள்.
"உங்களது விஷயம் என்ன?(ஏன்
இவ்வாறு இருக்கின்றீர்கள்?)"
என அவரிடம் ஸல்மான்(ரலி)
அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அப்பெண்மணி, "உம்
சகோதரர்
அபூதர்தா(ரலி)விற்கு உலக
விஷயங்களின் பால்
தேவையிருப்பதில்லை (
அதனால் நான்
என்னை அலங்கரித்துக்
கொள்வதில்லை)" என்றார்கள்.
பின்னர் அபூதர்தா(ரலி)
அவர்கள் வந்தார்கள். ஸல்மான்
(ரலி)வுக்காக
உணவு தயாரித்து அவரிடம்
"நீங்கள் சாப்பிடுங்கள்! நான்
நோன்பாளி" எனக்
கூறினார்கள். உடனே ஸல்மான்
(ரலி) அவர்கள், "நீங்கள்
சாப்பிடாதவரை நான்
சாப்பிடமாட்டேன்" எனக்
கூறவே அவர் (தமது நஃபில்
நோன்பை முறித்து) அவருடன்
சாப்பிட்டார்கள். பின்னர்
இரவானதும் அபூதர்தா(ரலி)
அவர்கள் (நஃபில்)
தொழுகைகளைத் தொழ
எழுந்து நின்றார்கள்.
உடனே ஸல்மான்(ரலி) அவர்கள்,
அவரிடம் "உறங்குவீராக!"
எனக் கூறினார்கள். (சிறிது)
உறங்கினார். பின்னர்
(எழுந்து நஃபில்) தொழ
நின்றார்கள். அப்பொழுதும்
ஸல்மான்(ரலி) அவர்கள்
"உறங்குவீராக!" எனக் கூற
அவர்கள் உறங்கிவிட்டார்கள்.
இரவின் கடைசிப்
பகுதி ஆனதும் ஸல்மான்(ரலி)
அவர்கள், அபூதர்தா(ரலி)
அவர்களிடம்
"இப்பொழுது எழுவீராக!"
என்றார். பின்னர் இருவரும்
(நஃபில்) தொழுதார்கள்.
பிறகு அபுதர்தா(ரலி)
அவர்களிடம் ஸல்மான்(ரலி)
அவர்கள் கூறினார்கள்: "உம்
இரட்சகனான
அல்லாஹ்விற்கு உம்மிடம் சில
உரிமைகள் உள்ளன.
உமது ஆன்மாவிற்கு உம்மிடம்
சில உரிமைகள் உள்ளன. உம்
குடும்பத்தினருக்கும்
உம்மிடம் சில உரிமைகள்
உள்ளன.
ஒவ்வொரு உரிமையை உடைய
ஒவ்வொருவருக்கும்
அவரது உரிமையை
வழங்குவீராக!"
அபுதர்தா(ரலி) அவர்கள்,
நபி(ஸல்) அவர்களிடம் வந்து,
ஸல்மான்(ரலி) அவர்கள்
கூறியதைக் கூறினார்கள்.
உடனே நபி(ஸல்) அவர்கள்
"ஸல்மான்(ரலி)
உண்மை கூறிவிட்டார்" எனக்
கூறினார்கள். (புகாரி)
மேற்கண்ட ஒரு நபிமொழி,
மனைவிக்குக் கணவன் ஆற்ற
வேண்டிய கடமைகள்
குறித்துத்
தெள்ளத்தெளிவாக
விளக்கிவிட்டது.
நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள் திருமணம் கண்
மற்றும்
அபத்தை பாதுகாக்கின்றது (
ஹதீஸ்). திருமணம் ஈமானின்
பாதி (ஹதீஸ்).
போதுமான
சக்தியிருக்குமேயானால்
திருமணம்
செய்து கொள்ளுங்கள்
அல்லது நோன்பிருந்து
கொள்ளுங்கள் என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள் (ஹதீஸ்).
ஆக, திருமணமானது
ஷைத்தான்களுடைய
தீங்கிலிருந்து
பாதுகாக்கும் கேடயமாக
இருக்கும்
பொழுது கேடயத்தைப்
பயன்படுத்தக்கூடிய
மனிதனும் கேடயமும்
வெவ்வேறு இடங்களில்
இருந்தால் இரண்டிற்கும்
பாதுகாப்பில்லை என்பது
மட்டுமில்லாமல்
இரண்டிற்கும் எந்த
நேரத்திலும் இடையூறுகள்
மற்றும் பிரச்சினைகள்
வரலாம்.
3. குழந்தைகளுக்குச்
செய்யும் பொறுப்புகளில்
குறைபாடு:
குழந்தைப் பிறப்பின்
காரணமாக அடையக்கூடிய
தாயின்
வேதனையை எத்தனை பேர்கள்
கண்டிருக்கிறார்கள்?
குழந்தை பிறக்கின்றபோது
தன்னுடன், தன்னுடைய கணவன்
இல்லையே என்று எத்தனை
மனைவியர் கண்ணீர்
விட்டிருப்பர்?
தான் பெற்ற குழந்தையின்
முகத்தை ஒருசில
மணித்துளிகளில்
எத்தனை தந்தை
கண்டிருக்கிறார்?
தன்னுடைய குழந்தைகளின்
அழகான சிரிப்பை,
அழுகையை, செல்லமான
கோபத்தை, உறங்கும் மற்றும்
உண்ணும் பாணியினை, தத்தித்
தவழ்ந்து நடக்க முயலும்
பொழுது தவறிவிழும்
கண்கொள்ளாக் காட்சியினை,
மழலைப் பேச்சினை இன்னும்
இதுபோன்ற
சிறு சிறு இன்பங்களைக்
கண்டுகளித்தவர்கள்
எத்தனை பேர்?
பிறந்த குழந்தை(களு)க்குத்
தாயானவள், தனக்குப்
பிறகு அறிமுகம்
செய்யக்கூடிய இரண்டாம் நபர்
யாரெனில் குழந்தையின்
தந்தை. ஆனால் தந்தை முகம்
பார்க்கும் நிலையில்
விட்டுவைக்கவில்லையே இந்த
வெளிநாட்டு வாழ்க்கை?
குழந்தை(களு)க்கு
இவ்வுலகிலும் மற்றும்
மறுவுலகிலும்
பயன்தரக்கூடிய கல்வியைக்
கொடுக்கக்கூடிய
விஷயத்திலும் தந்தையின்
பங்கு மிக மிகக்
குறைவுதான். குழந்தை(கள்)
என்ன கற்றிருக்கிறார்கள்?
என்ன கற்கப் போகிறார்கள்?
எப்படிக் கற்கிறார்கள்?
கற்றுத் தரக்கூடிய
ஆசிரியர்களின் நிலை என்ன?
பள்ளி மற்றும் கல்லூரிகளின்
நிலை என்ன? சகமாணவ மற்றும்
மாணவிகளின்
ஒழுக்கநிலை எவ்வாறு
உள்ளது?
யார்
யாரோடு பழகுகிறார்கள்?
எந்த நல்ல
விஷயங்களை வளர்த்துள்ளார்கள்
அல்லது தீயப் பழக்கங்களுக்கு
அடிமையாகியுள்ளார்கள்?
என்பன போன்றவற்றை அறிந்து
வைத்துள்ள தந்தையர்
எத்தனை பேர்?
கணவன் மனைவியாக
வெளிநாட்டில் குடும்பம்
நடத்தக்கூடியவர்களில்
கணிசமானவர்கள் ஒரு சில
வருடங்களுக்குப் பிறகு தன்
பிள்ளைகளைத் தாய்நாட்டில்
விட்டுவிட்டு தான்
மட்டுமே இங்கே
வாழ்கிறார்கள். இதனால்
பெற்றோர்களின் அன்பும்
அரவணைப்பும் பாசமும்
குழந்தைகளுக்குக்
கிடைக்காமல்
வளர்ந்து நாளடைவில்
பெற்றோரை மதிக்காத,
எதிர்க்கக்கூடிய மக்களாய்
மாறிவிடும் கொடுமையும்
ஏற்படலாம்.
4. உறவினர்கள் மற்றும்
சமுதாய மக்களுக்கு
தொடர்ச்சியாக
நிகழக்கூடிய மரணம்,
பிறப்பு, சுன்னத்தான
திருமணங்கள், மகிழ்ச்சியை
வெளிப்படுத்தக்கூடிய
இரு பெருநாள் தினங்கள்,
விடுமுறை நாட்கள் இன்னபிற
இனிய
நாட்களை உறவினர்களோடும்
சமுதாயத்தோடும்
பகிந்து கொண்டவர்கள்
எத்தனை பேர்?
பெற்றோர்கள், பிள்ளைகள்,
உடன்பிறந்தவர்கள்,
உறவினர்கள், அக்கம்
பக்கத்திலுள்ளவர்கள் மற்றும்
சமுதாய மக்கள்
மரணித்தபோது மய்யித்துகளை
நேரில் கண்டவர்கள், ஜனாஸாத்
தொழுகையில்
கலந்து கொண்டவர்கள், அடக்கம்
செய்யக்கூடிய
நிகழ்வுகளில் உடன்
நின்றவர்கள் நம்மில்
எத்தனை பேர்?
5. வீண் விரயம் மற்றும் ஆடம்பர
வாழ்க்கை
இயல்பாகிப்போன
நடைமுறையைச்
சொல்லப்போனால் நம் வீட்டுப்
பெண்களும் சரி, நம்முடைய
குழந்தைகளும்
சரி கிடைக்கின்ற
வருமானத்தைவிட
அதிகமாகச் செலவுகள் செய்ய
பழகியிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில்
கூறியதுபோன்று ஒரு
குடும்பத்தின்
முதலாவது நபர்
வெளிநாட்டு வாழ்க்கையைத்
தொடங்குவதற்கு முன்னால்
இருந்த வாழ்வாதாரச்
செலவுகளையும் அதற்குப்
பிறகுள்ள செலவுகளையும்
ஒப்பு நோக்கிக் கணக்கிட்டால்
மிகப் பெரிய
வித்தியாசத்தைக் காண
முடிகிறது.
சாதாரணமாக மாதந்தோறும்
ரூபாய் 3000
மாத்திரமே தன்னுடைய
மனைவி, மக்களுக்காக
அனுப்பி கொடுத்தார்
ஒரு சகோதரர். ஊரிலுள்ள
அவருடைய மனைவியும்
கணவரின்
சூழ்நிலை அறிந்து அந்தப்
பணத்தில் மாதாந்திர
செலவுகள் போக ஏறக்குறைய
ரூபாய் 1000 வரையில்
சேமிக்கக்கூடியவராகவும்
இருந்திருக்கிறார்.
ஆனால் நாட்கள் செல்லச்செல்ல
அக்கம்பக்கத்திலுள்ள
வெளி நாடுகளில்
பணிபுரிபவர்களின்
பெற்றோர்களும் மனைவிகளும்
வாழக்கூடிய ஆடம்பரமான,
பெருமையான, பகட்டான
மற்றும் வீணான செலவுகளைக்
கண்ட பின்னர் 'தானும் ஏன்
அதுபோன்று வாழக்கூடாது?'
என்று அந்தப் பெண்ணை எண்ண
வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக
வீணான மற்றும் அனாவசியமான
பொருட்களுக்கு செலவு
செய்ய வைத்துள்ளது இந்த
வெளிநாட்டு வாழ்க்கை.
எப்படிபட்ட நிலையென்றால்
ஆடம்பர மற்றும் சொகுசான
வாழ்க்கை வாழ ஆசைப்பட்டதின்
காரணத்தால் முதலில்
டெலிவிஷன் பெட்டி வீட்டில்
நுழைந்தது.
பிறகு டெலிபோன், மொபைல்,
வீடியோ, வீசீடீ, டீவீடீ, ஆடியோ,
வாசிங்மெசின், பிரிஜ்,
மெக்ரோ ஓவன், விதவிதமான
சோபாக்கள், வாட்டர் கூலரில்
தொடங்கி ஏர்கண்டிஷன்
பெட்டி வரை. (இந்த
பட்டியலில் குறிப்பிடாத
பொருள்களும் அடங்கும்).
இதுபோன்ற சாதனங்கள் தன்
வீட்டில் இல்லையென்றால்
தன்னை மற்றவர்கள்
மதிப்பற்றவராகக்
கருதுவார்கள் என்ற காரணம்
இதற்கெல்லாம்
கற்பிக்கப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால் ஷிர்க்
மற்றும் பித்அத்தான
செயல்களை, நிகழ்ச்சிகளை,
சம்பவங்களைக்
காரணங்காட்டி வீணான
விருந்து உபசரிப்புகள்
எனச் செலவுகள் வளர்ந்துக்
கொண்டே செல்கின்றன.
இதனால் வருமானம்
போதாக்குறை ஏற்படுகிறது.
தன்னிறைவு
ஏற்படுவதற்குண்டாக
சாத்தியகூறுகள் மிகக்
குறைவாக உள்ளதால்
வெளிநாட்டு வாழ்க்கையை
விட்டு மீள முடியாத
நிலையில், கம்பெனியாகப்
பார்த்து,
"உனக்கு வயதாகிவிட்டது.
நாங்கள் எதிர்பார்க்கும்
அளவுக்கு இனிமேல் உன்னால்
உழைக்க முடியாது.
இதற்கு மேல் நீ இருக்க
வேண்டாம் உன்னுடைய
நாட்டிற்குத்
திரும்பி சென்று விடு"
என்று அனுப்ப வேண்டும்
அல்லது அல்லாஹ்
காப்பாற்றட்டும் தீர்க்க
முடியாத
பெரும்வியாதிகள், நோய்கள்
ஏற்பட்டு முடியாத
நிலையில்
நாட்டிற்கு திரும்பும்
நாள்வரை வளைகுடா
வாழ்க்கையில்
உழன்று கொண்டிருக்க
வேண்டியதுதான்.
வெளிநாட்டு வாழ்க்கை
வாழக்கூடிய சகோதர-
சகோதரிகளின்
பெரும்பாலான
வீடுகளிலுள்ள
உறுப்பினர்கள் வீண் விரயமான
மற்றும் ஆடம்பரமான
செலவுகள் அதிகரிக்கக்
காரணம் என்னவெனில்,
வளைகுடாவில்
உழைக்கக்கூடிய தகப்பனோ,
கணவனோ, சகோதரனோ என்ன
வேலை செய்கிறார்கள்? என்ன
கஷ்டப்படுகிறார்கள்?
என்றறியாததால்
தனக்கு அக்கம்
பக்கத்திலுள்ளவர்களை
முன்னூதாரணமாகக்
கொண்டு செயல்படுகிறார்கள்.
ஆனால் குடும்பத்தாருடன்
தாய்நாட்டில்
இருக்கக்கூடிய
சூழ்நிலையில் மேற்சொன்ன
இரத்த பந்தங்கள்
உழைத்துவிட்டு வீடு
திரும்பும்போதுள்ள
களைப்பையும் அசதியையும்
வியர்வையும் நேரில்
காணும்போது உழைப்பின்
பயனை அறிந்து வீணான
மற்றும் ஆடம்பரமான
செலவுகளைச் செய்ய
தயங்குவார்கள்
அல்லது செய்யாமல்
இருந்துவிடுவார்கள்
என்பதில் எள்ளளவில்
சந்தேகமில்லை.
6. குடும்ப உறுப்பினர்களின்
பாதுகாப்பின்மை
எத்தனையோ சகோதரர்கள்
கஷ்டத்திற்கும்
சிரமத்திற்கும் மத்தியில்
சம்பாதித்த பணத்தைக்
கொண்டும் பலவாறு கடன்களைப்
பெற்றும்
வளைத்து வளைத்து வீட்டினைக்
கட்டி விடுகிறார்கள்.
எத்தனையோ குடும்பங்களில்
ஆண்கள் தன் நாட்டில் இல்லாத
சூழ்நிலையால்
தினசரி அச்சத்திற்கும்,
ஆதரவிற்கும் மத்தியில்
பாதுகாப்பு இல்லாத
சூழ்நிலையில் நம் குடும்பப்
பெண்கள் பொழுதைக்
கழித்து வருகிறார்கள்
என்பது நாம் அனைவரும்
அறிந்ததே. இன்னும்
இதுபோன்ற எண்ணற்ற
பாதிப்புகள் மற்றும்
குறைபாடுகள்
வெளிநாட்டு வாழ்க்கையினால்
இருந்தாலும்
விரிவஞ்சி முடிவிற்கு
செல்ல நினைக்கிறேன்.
வறுமையைப் போக்க
வெளிநாட்டிற்க வந்த நம்மில்
பலர், அல்ஹம்துலில்லாஹ்;
வறுமை போய்விட்டது. ஆனால்
வசதியான
வாழ்க்கை நடைமுறையும்
ஆடம்பரமும் அனாவசியமான
செலவுகளும் நம்முள்ளும் நம்
குடும்பத்தாருள்ளும்
குடிபுகுந்துள்ள
காரணத்தால் இதனைச் சரிகட்ட
அல்லது திருப்திபடுத்த
வேண்டிய சூழ்நிலையில்
இருப்பதால்
வறுமை ஒழிந்தபிறகும்
நம்மால் திரும்பி செல்ல
முடியாத நிலையில்தான்
இருக்கின்றனர்.
அதாவது ஆற்றில்
கம்பளி ஒன்று மிதந்து
வந்ததைக் கண்ட நாம்
அதனை எடுத்து பயனடையலாம்
என்ற ஆவலில் ஆற்றில்
குதித்துக்
கம்பளியை பிடித்துவிட்ட
பிறகுதான் தெரியவந்தது,
ஆகா! நாம்
பிடித்தது கம்பளி அல்ல;
மாறாகக் கரடி என்றும்
அது நம்மைப் பிடித்துக்
கொள்ள, அதிலிருந்து மீள
முடியாத நிலையில் ஆழம்
தெரியாமல் காலை விட்ட
கதையாகி கரடியிடம்
மாட்டிக் கொண்டிருக்கிறோம்
என்பதுதான் எதார்த்தம்.
ஆக இறுதியாக, முடிவாக
எந்தவொரு ஆண்மகன் தன் தாய்,
தந்தை, மனைவி, மக்கள் மற்றும்
சொந்த பந்தங்களுடன்
இருந்து உழைத்து
உண்ணுவார்களேயானால் அது,
தான் பிறந்த தாய்நாடாக
இருந்தாலும்
சரி அல்லது வெளிநாடாக
இருந்தாலும்
சரியே அதுதான்
வரமாகுமே ஒழிய, தான்
தனியாகவோ அல்லது தன்னோடு
தன் மனைவி-மக்களுடன்
மாத்திரம் பெற்றோர்கள்
இல்லாமல்
வெளிநாட்டு வாழ்க்கையை
கழிப்பார்களேயானால்
அது சாபமே சாபமே என்று
கூறி என் கருத்துகளுக்கு
முற்றுபுள்ளி இடுகிறேன்.
எல்லாவற்றையும்
நன்கு அறிந்தவன் அல்லாஹ்
ஒருவனே.
தகவல் : சத்தியமார்க்கம்
Category: வளைகுட செய்தி
0 comments