ரேஷன் கார்டு, பட்டா, லைசென்ஸ் பெற அதிகாரி லஞ்சம் வாங்கினால் புகார் தெரிவிக்க புதிய வசதி!
சென்னை: ரேஷன் கார்டு, பட்டா, லைசென்ஸ் உள்ளிட்ட அரசின் வசதிகளை பெற அதிகாரிகள் லஞ்சம் கேட்பது பற்றி புகார் தெரிவிக்க புதிய தொலைபேசி வசதியை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங் களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்தியா முழுவதும் பேசும் அளவுக்கு அக்கட்சி வளர்ந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி, ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஆகும். தற்போது நாடு முழுவதும் இதுபோன்ற ஒரு கட்சி ஆரம்பிக்க பலர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தாக்கம் தமிழகத்திலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரசிடம் மிக எளிதாக பெறக்கூடிய ரேஷன் கார்டு, பட்டா, டிரைவிங் லைசென்ஸ், பிறப்பு மற்றும் ஜாதி சான்றிதழ் என சின்ன சின்ன விஷயங்களை எப்படி பெற வேண்டும் என்று தெரியாமல் பலர் உள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்டு அரசு அதிகாரிகளும் யி100 முதல் பல ஆயிரம் லஞ்சம் வாங்குகிறார்கள். குறிப்பாக ரேஷன் கார்டு வாங்க 5 மட்டும் தான் செலவாகும். ஆனால் பல ஆயிரம் கொடுத்தும் இன்னும் கிடைக்காமல் நடையாய் நடப்பவர்கள் பலர் உள்ளனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னையில் ‘சட்ட பஞ்சாயத்து இயக்கம்‘ என்ற ஒரு அமைப்பை சில இளைஞர்கள் இணைந்து நாளை தொடங்க உள்ளனர். அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எப்படி சலுகைகளை பெற வேண்டும் என்று ஆலோசனை வழங்குவதுதான் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கொள்கை.
இதை வலியுறுத்தி, லஞ்ச ஊழல், மது ஒழிப்புக்கான தொலைபேசி சேவை மையத்தின் தொடக்க விழா நாளை மாலை 4 மணிக்கு தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடக்கிறது. புதிய சேவை மைய தொலைபேசி எண்ணை, ஐஏஎஸ் அதிகாரியும், கோஆப் டெக்ஸ் மேலாண் இயக்குனருமான உ.சகாயம் அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதுடன், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடவடிக்கை எடுக்கும். கடந்த சில மாதங்களாக சோதனை முறையில் ‘76671 00100‘ என்ற தொலைபேசி எண்ணை இணையதளத்தில் அறிமுகப்படுத்தியபோது இந்த இயக்கத்திற்கு ஆயிரக்கணக்கானோர் தொடர்பு கொண்டனர்.
Category: மாநில செய்தி


0 comments