பாதுகாப்பு இல்லாத ஏ.டி.எம். மையங்களை மூட வேண்டும்: வங்கிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தல்!
03 December 2013
சென்னை
பெங்களூர் சம்பவத்தின் எதிரொலியாக சென்னையில் பாதுகாப்பு குறைபாடுள்ள ஏ.டி.எம். மையங்களை மூடுமாறு பெருநகர காவல்துறை அதிகாரிகள் வங்கிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பெங்களூரில் என்.ஆர்.சதுக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் கடந்த 20-ஆம் தேதி பணம் எடுக்க சென்ற ஜோதி என்ற பெண் தாக்கப்பட்டார்; அவருடைய பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. இச் சம்பவத்துக்குப் பின்னர் நாடு முழுவதும் ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில் பாதுகாப்பு குறைப்பாடுடன் உள்ள ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
சென்னையில்ள 45 அரசு மற்றும் தனியார் வங்கிகளின் சார்பில் சுமார் 4,200 ஏ.டி.எம். மையங்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் ஏற்கெனவே எழும்பூர், எம்.கே.பி. நகர் உள்ளிட்ட 7 பகுதிகளில் மர்ம நபர்கள் ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவங்கள் சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து நடைபெற்றதால், அவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் முக்கியமான பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் உள்ள ஏ.டி.எம். மையங்களைத் தவிர்த்து குடியிருப்பு, வணிக நிறுவனங்கள், தெருக்கள் ஆகியவற்றில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என புகார் கூறப்பட்டு வந்தது.
இங்கு கண்காணிப்பு கேமரா சரியாக இயங்குவதில்லை; முதியவர்கள் பாதுகாவலர்களாக உள்ளனர்; ஏ.டி.எம். மையங்கள் சரியான பராமரிப்பில் இல்லை போன்ற புகார்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், பெருநகர காவல்துறையின் சார்பில் ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் 45 அரசு மற்றும் தனியார் வங்கிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 130 பேர் பங்கேற்றனர். கூட்டத்தை கூடுதல் ஆணையர்கள் பி.தாமரைக்கண்ணன், ராஜேஷ்தாஸ் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர்.
கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், ஏ.டி.எம். மையங்களின் உள் பகுதியிலும் வெளிப் பகுதியிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்; தகுதியான நபர்களை பாதுகாவலர்களாக நியமிக்க வேண்டும்; ஏ.டி.எம். கார்டை தேய்த்தால் மட்டுமே மையத்தின் கதவு திறக்கும் வகையில் ஏ.டி.எம். மையத்தை வடிவமைத்திருக்க வேண்டும்; ஏ.டி.எம். மையத்தின் கதவுகளை வேகமாக இழுத்து அடைக்கும் வகையில் இருக்கக் கூடாது; 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் ஏ.டி.எம். மையத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மூட வலியுறுத்தல்: போதிய பாதுகாப்பு இல்லாத ஏ.டி.எம். மையங்களை எவ்வித சமரசமும் இன்றி மூடுமாறு காவல்துறை அதிகாரிகள், வங்கி நிர்வாகிகளிடமும் வலியுறுத்தியுள்ளனர். அந்த ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு குறைபாட்டை நீக்கிய பின்னர், மீண்டும் அவற்றை திறக்கலாம் எனவும் அறிவுறுத்தினராம்.
அதேநேரத்தில் பாதுகாப்பு குறைப்பாடுடன் உள்ள ஏ.டி.எம். மையங்களை வங்கிகள் இயக்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் ஏ.டி.எம். மையங்களில் முதியவர்களையோ, மது அருந்துபவர்களையோ, நோயினால் பாதிக்கப்பட்டவர்களையோ பாதுகாவலர்களாக நியமிக்கக் கூடாது என கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை வங்கிகள் எடுக்கும்பட்சத்தில் ஏ.டி.எம். மையங்களில் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் முழுமையாக நடைபெறாமல் தடுக்க முடியும் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
Category: மாநில செய்தி


0 comments