A.T.M.களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு!
மும்பை: ஏ.டி.எம்., மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியிருப்பதால், அந்த செலவை, பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்த, வங்கிகள் தயாராகி வருகின்றன. மாதத்துக்கு, ஐந்துக்கும் மேற்பட்ட முறை, ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும், கூடுதலாக, 6 ரூபாய் பிடித்தம் செய்ய, வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
அறிவுறுத்தல்:
கர்நாடக மாநிலம், பெங்களூரில், சமீபத்தில், ஏ.டி.எம்., மையத்தில், பணம் எடுக்கச் சென்ற பெண், மர்ம நபரால் தாக்கப்பட்டார். பலத்த காயங்களுடன், மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற அவர், இப்போது தான், குணமடைந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்றும், ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும், கர்நாடகா, தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த போலீசார், வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாவிட்டால், ஏ.டி.எம்.,களை மூட வேண்டும் என்றும், கர்நாடகா போலீசார், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால், வங்கிகள், தங்கள், ஏ.டி.எம்.,களில், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய, நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.
26 ரூபாய்:
'காவலாளிகளை நியமிப்பது, ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, ஒவ்வொரு, ஏ.டி.எம்., மையத்துக்கும், 50 ஆயிரம் ரூபாய், கூடுதலாக செலவாகும்' என, வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த செலவுகளை, ஏ.டி.எம்.,களுக்கு, பணம் எடுக்க வரும், வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்த, வங்கிகள் திட்டமிட்டுள்ளன. தற்போது, தங்களுக்கு கணக்கு இல்லாத, வேறு வங்கிகளின், ஏ.டி.எம்.,களில், மாதத்துக்கு, ஐந்து தடவை, கட்டணமின்றி, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம்.
பிடித்தம்:
ஐந்துக்கும் மேற்பட்ட முறை, பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும், 20 ரூபாய், கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது, வாடிக்கையாளர்கள் கணக்கில் உள்ள தொகையில், 20 ரூபாய், பிடித்தம் செய்யப்படும். தற்போது எழுந்துள்ள நெருக்கடியை சமாளிக்கும் வகையில், 20 ரூபாய்க்கு பதிலாக, 26 ரூபாய் பிடித்தம் செய்ய, வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதுதவிர, கட்டணமின்றி பணம் எடுக்கும் தவணையை, தற்போதுள்ள, ஐந்திலிருந்து, மூன்றாக குறைக்கவும், வங்கிகள் திட்டமிட்டுள்ளன; இதனால், சேவை கட்டணம், மேலும் உயரும். 'ஆனாலும், வங்கிகளின் இந்த திட்டத்துக்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்குமா என்பது, சந்தேகமே' என்கின்றன, வங்கி வட்டாரங்கள்.
Category: மாநில செய்தி


0 comments