கொடூர குற்றத்தில் ஈடுபட்டால் 16 வயது சிறுவர்களையும் மேஜராக கருத சட்ட திருத்தம்!
புதுடெல்லி, டிச. 3:
கொலை, பலாத்காரம் போன்ற கொடிய குற்றங்கள் புரியும் 16 வயது குற்றவாளிகளையும் மேஜர்களாக கருதி இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர பரிசீலனை செய்து வருகிறது.
பதினெட்டு வயதுக்கு குறைவான இளைஞர்களை சிறுவர்களாக கருத வேண்டும் என இந்திய சிறார் சட்டம் கூறுகிறது. இந்த வயதுக்குட்பட்டவர்கள் கொடூரமான குற்றங்களை புரிந்தாலும் அவர்களை இளம் சிறார் சட்டத்தின் கீழ் அதற்கான நீதிமன்றத்தில் தான் விசாரிக்க முடியும். டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் கைதான 6 பேர்களில் ஒருவன் சிறுவன். இவனுக்கு அதிக பட்சம் 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. மற்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் வயதை பார்க்காமல், மன முதிர்ச்சியை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ தலைவர் சுப்ரமணியசாமி உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
டெல்லி பலாத்கார வழக்கில் சிக்கிய சிறுவனை மேஜராக கருதி இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என கூறினர்.
இந்நிலையில் கொலை, பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடும் 16 வயதுக்கு மேற்பட்டோரை மேஜராக கருதி ஐபிசி சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால் சிறார் சட்டம் விரைவில் திருத்தம் செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்த திருத்த மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
Category: மாநில செய்தி


0 comments