சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் மீண்டும் விபத்து தானியங்கி கதவு கண்ணாடி உடைந்து விழுந்தது!
சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் 10–வது முறையாக தானியங்கி கதவு கண்ணாடி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து விழும் மேற்கூரை
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் ரூ.2,015 கோடி செலவில் கட்டப்பட்டது. இதை இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கடந்த ஜனவரி மாதம் திறந்துவைத்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் உள்நாட்டு முனையம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதுவரை புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் மேற்கூரைகள் 7 தடவை இடிந்து விழுந்தது. கடந்த 10 தினங்களுக்கு முன் பன்னாட்டு முனையத்தில் விமானங்கள் நிறுத்தும் பகுதியில் தடுப்பாக அமைக்கப்பட்டு இருந்த கண்ணாடி சுவர்கள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
அதேபோல் கடந்த வாரம் உள்நாட்டு முனையத்தில் விமானிகள், ஊழியர்கள் செல்லும் பாதையின் கண்ணாடி கதவு உடைந்தது. இதுவரை விமான நிலையத்தில் 9 முறை மேற்கூரைகள், கண்ணாடி கதவுகள் விழுந்தன. மழையால் இவை விழுந்துவிட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் விமானிகள், ஊழியர்கள் செல்லும் பாதையில் டிராலிகள் கொண்டு செல்லப்பட்டபோது டிராலி இடித்ததில் விழுந்ததாக விமான நிலைய அதிகாரிகள் காரணங்களை தெரிவித்தனர்.
கதவு கண்ணாடி உடைந்து விழுந்தது
உள்நாட்டு முனையத்தில் வருகை பகுதியில் கேட் எண் 3 உள்ளது. இந்த பகுதி மிகமுக்கிய பிரமுகர்கள் வரக்கூடிய பகுதியாகும். இங்குள்ள கதவுகள் தானியங்கி கதவுகளாகும். இதில் உள்பகுதியில் உள்ள சுமார் 10 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கதவு ஒன்று நேற்று பகல் 2 மணி அளவில் திடீரென உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த பகுதியில் யாரும் இல்லாததால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
அப்போது பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். உடனே அதிகாரிகள் விரைந்து வந்து இடிந்து விழுந்த கண்ணாடிகளை அகற்றினார்கள். இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரமான பொருட்களா?
கடந்த 6 மாதங்களில் 10 முறை மேற்கூரை மற்றும் கண்ணாடிகள் விழுந்து உள்ளது. இந்த மாதத்தில் இது 3–வது முறையாக கண்ணாடிகள் உடைந்து உள்ளன. புதிய வசதிகளுடன் கட்டப்பட்ட விமான நிலையத்தில் பயன்படுத்தப்பட்டவை தரமான பொருட்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். விமான நிலைய புதிய முனையங்களில் தொடர்ந்து மேற்கூரை மற்றும் கண்ணாடிகள் விழுவதால் அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில் நேற்று விமானங்களை தீவிரவாதிகள் கடத்தினால் எப்படி மீட்பது? என்ற பாதுகாப்பு ஒத்திகை பற்றிய முகாம் நடந்தது. தற்போது தீவிரவாதிகளை விட விமான நிலைய கட்டுமான பணிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது பற்றி தான் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.
Category: மாநில செய்தி


0 comments