ATM-எனி டைம் மர்டர்!
பெங்களூருவின் பரபரப்பான உல்சூர் சாலையில் இயங் கும் ஏ.டி.எம். மையத்தில் நடைபெற்ற பயங்கரம், நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு பற்றிய அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. ஏ.டி.எம். என்பதற்கு, எனி டைம் மர்டர் என்று புது அர்த்தம் வந்துவிடுமோ என்று பதைபதைக்கிறார்கள் மக்கள்.
பெங்களூருவில் வசிப் பவர் தனியார் வங்கி கிளை மேலாளர் ஜோதி உதய். கடந்த 19-ம் தேதி, உல்சூர் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக் கச் சென்றார். அப்போது, சாவகாசமாக உள்ளே நுழைந்த ஒருவன், ஏ.டி.எம். மையத்தின் கதவை இழுத்து மூடியுள்ளான். வெகுநேரம் கழித்து, ஏ.டி.எம். உள்ளே பணம் எடுக்க நுழைந்தவர்கள் ஜோதி உதய் வெட்டுப்பட்டு ரத்தக் காயங்களுடன் கிடப்பதைப் பார்த்து பதறி போலீஸுக்குத் தகவல் சொல்லியுள்ளனர். அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதி வான காட்சிகளைப் பார்த்த போலீஸாருக்கு இன்னும் அதிர்ச்சி விலகவில்லை.
ஆடு வெட்டப் பயன்படுத்தும் பயங்கரமான அரிவாளுடன் உள்ளே நுழைந்த அந்த ஆசாமி, ஜோதி உதய்யை சரமாரியாக வெட்டுகிறான். அவ னிடம் இருந்து தப்பிக்க அவர் அங்கும் இங்கும் ஓடுகிறார். ஆனால், கதவு மூடப்பட்டு இருப்பதால், அவரால் தப்பிக்க முடியவில்லை. சரமாரியாக வெட்டிவிட்டு, மிகவும் நிதானமாக அரிவாளில் படிந்திருந்த ரத்தக்கறையை துடைத்துவிட்டு வெளியேறுகிறான். அந்தக் காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் வெளி யாக... இந்தியா முழுக்க உள்ள அனைவரும் திகிலில் உறைந்தனர்.
வளர்ச்சியடைந்த ஒரு மாநிலத்தின் தலைநகரில், பரபரப்பான வீதியில் இருக்கும் ஏ.டி.எம். மையத்தில் சர்வ சாதாரணமாக ஒரு கொடூரச் செயலைச் செய்துவிட்டு ஒருவனால் வெளியேற முடிகிறது என்றால், ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள தெருக்களில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படும் ஏ.டி.எம்-களின் பாதுகாப்பைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
இந்தக் கொடூரச் சம்பவத்துக்குப் பிறகு தூக்கம் தொலைத்த கர்நாடக அரசு, செக்யூரிட்டிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்களை இழுத்து மூடியுள்ளது. தனிப்படைகளை அமைத்து குற்ற வாளியைத் தேடிவருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களின் பாது காப்பு ஏற்பாடுகள் எந்த லட்சணத்தில் உள்ளது என்று அலசினோம்.
தமிழகத்தின் தலைநகரில் ஆரம்பித்து கடைக்கோடி கிராமங்கள் வரை உள்ள ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமான நிலையில்தான் உள் ளன. காவலாளியும் இல்லாத, கதவுகளும் இல்லாத ஏ.டி.எம். மையங்கள் சென்னை நகரிலேயே உள்ளன. காவலாளி உள்ள ஒருசில ஏ.டி.எம். மையங்களிலும் அவர்கள் சொல்லிக்கொள்ளும்படியாக செயல்படுவது இல்லை. 65 வயதைக்
கடந்த அவர்கள், பகலிலேயே வாசலில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்றனர். பல ஏ.டி.எம். மையங்கள் இரவு நேர பார் ஆகத்தான் செயல்படுகின்றன. பல இடங்களில் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்படவே இல்லை. பெரும்பாலானவற்றில் பொருத்தப்பட்ட கேம ராக்களும் செயல்படுவது இல்லை.
தமிழகத்தில் ஏ.டி.எம். மையங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் பற்றியும், காவல் துறை மேற் கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் காவல் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.
''காஞ்சிபுரத்திலும் சேலத் திலும் நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த காவலாளிகள் வெட்டிக் கொல்லப்பட்ட சம் பவங்கள்தான் தமிழகத்தில் நடைபெற்ற ஏ.டி.எம். கொலைச் சம்பவங்கள். மற்றபடி, இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஏழெட்டு சம்பவங்களும் ஏ.டி.எம். மெஷினை உடைத்து கொள்ளையடிக்க நடைபெற்ற முயற்சிகள்தான். அவை அனைத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். இப்படி ஒவ்வொரு சம்பவம் நடக்கும்போதும், பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள் என்று வங்கி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி வருகிறோம்.
முதலில் அனைத்து ஏ.டி.எம். மையங்களுக்கும் செக்யூரிட்டிகளை கண் டிப்பாக நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கப்படுபவர்கள், அந்த வேலைக்குத் தகுதியான ஆட்கள்தானா என்பதைப் பார்த்து தேர்வுசெய்ய வேண்டும். பல இடங்களில் உள்ள செக்யூரிட்டிகள் நோயாளிகளாகவும் கண்பார்வை சரியில்லாதவர்களாகவும் உள்ளனர். அனைத்து ஏ.டி.எம். மையங்களுக்கும் காண்காணிப்பு கேமராக்களைக் கட்டாயமாக்க வேண்டும். அவை செயல்படுகிறதா என்பதை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த இரண்டு ஏற்பாடுகளை முறையாகச் செய்துவிட்டாலே, பெரும்பாலான தவறுகளைத் தடுத்துவிட முடியும்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ, வேறு காரணங்களினாலோ கேமராக்கள் பழுதாகிவிடும் சமயங்களில், அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கும் சேவை ஆட்டோ மெட்டிக்காக நிறுத்தப்படும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போதைய தொழில் நுட்பத்தில் இது மிக எளிய வேலைதான். அது போல், பல வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களின் கதவுகள், உள்ளே நடப்பது தெரியாத வகையில், கறுப்பு ஸ்டிக்கரால் ஒட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு. இதை உடனடியாக அகற்ற வேண்டும். பாதி மறைக்கப்பட்டும் பாதி வெளி யில் தெரியும் வகையிலும் இருக்கலாம்.
கோடிக்கணக்கில் பணம் இருக்கும் இடம் ஏ.டி.எம். மெஷின்கள்தான். அவற்றை ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறங்களில் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, வங்கி அலுவலகங்கள் மற்றும் லிஃப்டுகளில் உள்ளதைப்போல், அலாரம் வசதியை அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் அமைக்க வேண்டும். இது செலவு குறைவான ஒரு ஏற்பாடுதான். இது எதிர்பாராத ஆபத்து நேரத்தில், மக்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களையும் முற்றிலுமாக கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். மையங்களையும் தவிர்த்துவிட வேண்டும்.
காவல் துறை எப்போதும் ஏ.டி.எம். மையங்களைத் தீவிரமாகக் கண்காணிக்கிறது என்றாலும், பெங்களூரு சம்பவத்துக்குப் பிறகு ஏ.டி.எம். மையத்தை கண்காணிப்பதை கட் டாயமாக்கி உள்ளோம். ரோந்து சமயத்தில் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு பிறப் பித்துள்ளோம். அத்துடன் பணியில் இருந்த காவலர், ஏ.டி.எம். மையத்தில் உள்ள குறிப்புப் புத்தகத்தில், கண்காணித்தற்கு அத்தாட்சியாக கையெழுத்துப் போட வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது'' என்றார்.
இதுபற்றி தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். சேவை பொறுப்பாளரிடம் பேசினோம். ''ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பவரின் பாஸ்வேர்டு, அவர் எவ்வளவு தொகை எடுக்கிறார் போன்ற விவரங்களை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான், ஏ.டி.எம். மைய கதவில் கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இப்போது அதை மாற்றி வருகிறோம். ஒரு வங்கிக்கு எல்லாப் பகுதிகளிலும் ஏ.டி.எம். மையங்கள் உள்ளதால், அவற்றை வங்கி நிர்வாகமே நேரடியாக கண்காணிப்பது முடியாத காரியம். அதனால், அவுட்சோர்ஸிங் முறையில் ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு போன்றவற்றை வெளியில் உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறோம். எங்களிடம் இருந்து நல்ல தொகைதான் வாங்குகிறார்கள். ஆனால், அவர்கள் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, பல தவறுகளை செய்கின்றனர். கண்காணிப்பு கேமராக்களையும் அந்த நிறுவனத்தினர்தான் அமைக்கின்றனர். ஆனால், அவை பழுதடைந்தால், உடனே சரிசெய்ய வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துவது இல்லை. இப்போது, பிரச்னை தீவிரமடைந்து உள்ளதால், முன்பைவிட அதிகமாக கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்டிப்பாக பலப்படுத்துவோம்'' என்றார்.
இதுபற்றி தனியார் செக்யூரிட்டி நிறுவன மேலாளர் ஜவஹர் என்பவரிடம் பேசினோம். ''வங்கிகள் எந்தளவுக்கு எங்களுக்கு நிதி ஒதுக் குகிறதோ அந்த அடிப்படையில் நாங்கள் பாது காப்பு ஏற்பாடுகளை செய்கிறோம். இவை அனைத் தும் எழுத்துப்பூர்வமான ஆவணங்களுக்குப் பிறகே செய்யப்படுகின்றன. அதனால், இதில் நாங்கள் ஏமாற்றுவதற்கு ஒன்றும் இல்லை.''
ஆட்டோக்களுக்கு காலக்கெடு விதித்து மீட்டர் நிர்ணயித்ததுபோல், வங்கி ஏ.டி.எம்-களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்வதற்கும் அரசு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். கெடு முடிந்த பிறகும் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத ஏ.டி.எம். மையங்களை இழுத்து மூட «வ்ண்டும். தமிழக அரசு இதைச் செய்துவிட்டால் பல அசம்பாவிதங்களை தடுத்து விடலாம்!
Category: மாநில செய்தி


0 comments