.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

கத்தார் : உலகக் கோப்பைக்காக உயிரை விடும் தொழிலாளிகள்!

Unknown | 8:30 PM | 0 comments

2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான கட்டிட வேலைகள் சுமார் 4,000 புலம் பெயர் ஏழை கட்டிடத் தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கி விடும் என அச்சம் தெரிவித்திருக்கிறது சர்வதேசிய தொழிற்சங்க கூட்டமைப்பு. இங்கிலாந்தை சேர்ந்த கார்டியன் பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ள கத்தாரின் நவீன கொத்தடிமைத்தனத்தை பற்றிய இந்த செய்தி நம்மை குலை நடுங்கச் செய்கிறது.
கொத்தடிமை உழைப்பு
கத்தார் : புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சம்பளமில்லாமல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். (படம் : நன்றி கார்டியன்).
மத்திய கிழக்கு நாடான கத்தாரில் வரும் 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்க உள்ளன. அதற்கு தயாராகி வரும் கத்தார், கால்பந்து போட்டிகளுக்குத் தேவையான நவீன வசதிகளைக் கொண்ட விளையாட்டு அரங்கங்கள், வீரர்கள் தங்கும் நவீன வசதிகளைக் கொண்ட கால்பந்து கிராமம், பிற சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல வண்ண கட்டிடங்கள், புதிய ஷாப்பிங் மால்கள் என புதிய கட்டிடப் பணிகள், பழைய கட்டிட மராமத்து வேலைகளை வேகமாக செய்து வருகிறது.
இந்த கட்டிடப் பணிகளுக்காக பல்லாயிரம் தொழிலாளர்கள் உலகின் பல நாடுகளிலிருந்தும் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் என்று பல்வேறு நாடுகளிலிருந்து ஏழை தொழிலாளர்கள் கத்தாருக்கு புலம் பெயர்கின்றனர்.  இந்த வேலைகளுக்காக கத்தாரில் குவிந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்களை பற்றி சந்தேகம் கொண்டு அவர்களைப் பற்றி விசாரித்த கார்டியன் பத்திரிக்கை பல அதிர்ச்சி தரும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.
ஐந்து மாத கால கட்டத்தில் இந்தியாவை சேர்ந்த 82 தொழிலாளர்கள் சரியான காரணமின்றி இறந்திருப்பதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. நேபாள தூதரகம் தரும் தகவல் இன்னும் அதிர்ச்சிகரமாக உள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் நேபாளத்தைச் சேர்ந்த 32 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 20 வயதுகளில் உள்ளவர்கள். இந்த கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் மரணம் ஒரு நாளைக்கு ஒருவர் என்றுள்ளது.
இறப்புகள் பட்டியல்
ஜூலை 2013-ல் நிகழ்ந்த அனைத்து மரணங்களைப் பற்றி தோஹாவில் உள்ள நேபாள தூதரகத்தின் பதிவேடு. (படம் : நன்றி கார்டியன்).
இது நவீன கொத்தடிமைத்தனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த கொத்தடிமைத்தனம் திட்டமிட்டு அரசு ஆதரவுடன் சட்டப்படி நடக்கிறது.
திறமை குறைந்த தொழிலாளர்கள் கத்தாரில் நுழைய யாராவது ஒருவரின் (கத்தாரை சேர்ந்தவர் அல்லது நிறுவனத்தின்) உத்தரவாதம் வேண்டும் என கத்தாரின் “கஃபாலா” சட்டம் கூறுகிறது. ஏழைகளை கடன் கொடுத்து அடிமைகளாக்கிக் கொள்ளும் கங்காணிகள் அவர்களுக்கு போலி பாஸ்போர்ட்டை ஏற்பாடு செய்து கத்தாருக்கு அனுப்பி வைக்கிறார்கள். கத்தாரில் கட்டிட வேலைகளை கான்டிராக்ட் எடுத்திருக்கும் நிறுவனம் அந்தத் தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் அளித்து நாட்டினுள் வர அரசிடம் அனுமதி பெற்று விடும்.
அப்படி வேலைக்கு சேரும் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் பணம் கடனை அடைக்கவே சரியாகிவிடும். உத்தரவாதம் தரும் நிறுவனங்கள் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொள்வதால் இவர்கள் அங்கு அடிமையாகக் கிடக்க வேண்டியது தான் ஒரே வழி. கத்தாரில் கட்டிடப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த கூலி கொடுக்கப்படுகிறது; அதில் பெரும் பகுதி கடனுக்கு கழித்துக்கொள்ளப்படுகிறது.
ஒரு சிறு அறையில் 12 பேர் வரை மாட்டு கொட்டகையில் அடைந்து கிடைப்பதை போல் அடைந்து கிடக்க வேண்டும். பலருக்கு உணவு கூட ஒழுங்காக தரப்படுவதில்லை, பிச்சை எடுக்க வேண்டிய அவல நிலை. பலர் 24 மணி நேரம் பட்டினியுடன் வாழ வேண்டும் அப்படியே வேலை பார்க்க வேண்டிய அவல நிலை.
கட்டிடப் பணிகள் 50 டிகிரி சூட்டில் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை இருக்கும் இதற்கு நடுவில் கிடைப்பது தான் ஓய்வு, தூக்கம் எல்லாம். ஓய்வு நாட்களோ விடுமுறை நாட்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான சூழலில் பல தொழிலாளர்கள் மிக விரைவில் இறந்து விடுகிறார்கள். பெரும்பாலான மரணங்கள் கட்டிடப் பணிகளின் போது நடக்கும் விபத்துக்கள், தொற்று நோய், மாரடைப்பு போன்றவற்றால் ஏற்படுகின்றன. பாதிக்கும் மேல் இறந்தவர்களின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை என்பதால இறப்புக்கான காரணம் தெரிவதில்லை.
நேபாள பெற்றோர்
மலேசியாவிலும், கத்தாரிலும் வேலை செய்யப் போய் உயிரிழந்த தங்கள் மகன்களின் புகைப்படங்களுடன் தல்லி காத்ரியும் அவரது கணவர் தில் மேனும். அவர்கள் 20 வயதான இளைய மகன் கத்தாரில் மாரடைப்பால் இறந்தான். படம் : நன்றி கார்டியன்.
“எங்களுக்கு இந்த வெயிலில் வேலை செய்யும் போது சரியாக தண்ணீர் கூட கொடுப்பதில்லை“ என குமுறுகிறார் பெயர் சொல்ல விரும்பாத கட்டிட தொழிலாளி. “நாங்கள் என்ன செய்ய முடியும், என் மோசமான நிலையை பற்றி மேலாளரிடம் கேட்டதற்கு என்னை உதைத்தார். இந்த வேலையை விட்டு ஓடினால் நான் ஒரு சட்டவிரோத அகதி. போலிஸ் என்னை எந்த நேரத்திலும் கைது செய்யும்” என்கிறார் அவர்.
கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்காக உருவாக்கப்படும் இடத்தின் பெயர் லுசேயல் நகரம். இங்கு கத்தார் அரசு 45 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 2.7 லட்சம் கோடி ரூபாய்) செலவில் புதிய நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்கள் பல சிறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தமளித்து வேலையை நிறைவேற்றுகிறார்கள். இது ஒரு சிக்கலான வலைப் பின்னல் போன்றது. அதனால் பழியை தட்டிக் கழிக்க வசதியாக உள்ளது.
கார்டியனின் விசாரணையில் தெரிய வந்திருப்பது பெரும்பாலான நிறுவனங்கள் இந்த கொத்தடிமையை முறை திட்டமிட்டு கடைப்பிடிக்கின்றன என்பது தான். அது வெளிப்படையாகவும் உள்ளது. இதை பற்றி லுசேயல் திட்ட முதன்மை மேலாளார் ஹால்க்ரோவ் கூறுகையில் “இந்த திட்டத்தில் நாங்கள் சட்டவிரோதமாக்வோ தொழிலாளர்களின் நலனுக்கு எதிராகவோ எதுவும் செய்வதில்லை. தொழிலாளர் நலனுக்கு எதிராக செய்யப்படும் எநத செயலுக்கும் நாங்கள் பூஜ்ய-சகிப்புத்தன்மை கொள்கையை பின்பற்றுகிறோம் (பூஜ்ய சகிப்புத் தன்மை என்பது குற்ற நிகழ்வு நிரூபிக்கப்பட்டால் சமரசமின்றி நடவடிக்கை எடுக்கும் கொள்கை). ஆனால் எங்கள் ஒப்பந்ததாரர்களை எங்களால் நேரடியாக கட்டுப்படுத்த முடியாது” என கைவிரிக்கிறார்.
லுசேலியா திட்ட நிர்வாகம் நேரடியாக எந்தத் தொழிலாளரையும் வேலைக்கு அமர்த்தவில்லை. மொத்த வேலைகளுமே ஒப்பந்ததாரர்கள் செய்வது தான். லுசேலியாவின் பூஜ்ய சகிப்புத்தனமை கொள்கை வெத்து வேட்டு தான். அவர்கள் உண்மையில் ஒப்பந்ததாரர்களை கண்டுக்கொள்வதில்லை.
அரசோ அனைத்தையும் கண்காணிப்பதாகவும், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை சட்டம் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறது. ஒரு அதிகாரி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகளை கண்காணிப்பதாகவும், சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பதாகவும் கூறுகிறது. அதிகாரி ஏதோ ஒரு நாள் வருவார் சோதிப்பார், சம்பளம் வழங்கப்படுகிறதா? போன்ற சில அடிப்படைகளை கண்காணிப்பதுடன் அவரது சோதனை நின்று விடும். மேலும் அலறினால் பணம் வாயில் திணிக்கப்படும்.
“உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட இருக்கும் கால்பந்து வீரர்களை வெயில் தாக்கும் என கவலைப் பட்டு ஏற்பாடுகள் செய்யும் இவர்கள் தொழிலாளர்களின் நிலையை கண்டு கொள்ளாதது தான் வேதனை” என ஒரு தொழிலாளர் அழுகிறார். அவருக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. எங்கே பணம் கையில் சேர்ந்தால் ஓடிப்போய் விடுவாரோ என சம்பளம் கொடுக்கவில்லை. அவரால் ஒன்று செய்ய முடியாத கையறு நிலை.
கத்தாரில் வேலை சேய்யும் தொழிலாள்ர்களில் 90 சதவீதத்தினர் புலம் பெயர்ந்தவர்கள் தான். இந்த கட்டிட தொழிலாளர்களின் நிலை ஏறக் குறைய அனைவருக்கும் பொருந்துவது தான். உலகம் முழுவதிலும் சுமார் 2.1 கோடி தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருவது செல்வம் சேர்த்து பின்னொரு காலத்தில் சுகமான வாழ்க்கை வாழலாம் என்ற கனவுடன் அல்ல, அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை தனக்கும் தன் குடும்பத்திற்கும் வழங்க வேண்டும் என்ற ஒரு ஆசையால் தான்.
நவீன கொத்தடிமைத் தனம் என்று கார்டியன் பத்திரிக்கை இதை அழைத்தாலும், முதலாளித்துவ பொருளாதாரத்தில் அடிமைத்தனம் அத்தியவசிய முதுகெலும்பை போன்றது. முதலாளித்துவம் இருக்கும் வரை கொத்தடிமைத் தனம் பழைய அல்லது புதிய வடிவில் தொடர்ந்தபடியே தான் இருக்கும். அதற்கு இசுலாத்தின் புண்ணிய பூமியும் விலக்கல்ல!

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1