பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் குடும்பநல இயக்க மண்டல இயக்குனர் ஆய்வு!
பெரம்பலூரில் மத்திய சுகாதார குடும்பநல இயக்க மண்டல இயக்குனர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்க மண்டல இயக்குனர் டாக்டர் துரைவெங்கடேசன் தலைமையில் தொழில்நுட்ப ஆய்வாளர் நடேசன், தொழில்நுட்ப உதவியாளர் லிங்கேஸ்வர்ராவ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது மருத்துவனையில் பேறுகால கால பின் கவனிப்பு மையம், தீவிர சிசு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, மன நல பிரிவு, காச நோய் பிரிவு உள்ளிட்ட பகுதியை பார்வையிட்டனர். பிறந்த குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி இம்மருத்துவமனையிலேயே இருப்பு வைத்து பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்திரவிட்டனர்.
பின்னர் டாக்டர் துரைவெங்கடேசன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேசிய சுகாதார திட்டப்பணிகளை நிறைவேற்றுவதற்காக தாய், சேய் நலம், குழந்தைகளுக்கான தடுப்பூசி, மனநல நோய்க்கான சிகிச்சை, காச நோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமை மருத்துவனைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முக்கியமாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் மரியாதையுடன் உயர்மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இம்மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு விரைவில் டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மனோகரன், இருக்கை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) சஞ்சய்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
Category: மாவட்ட செய்தி

0 comments