"ரஞ்சன்குடி- வி.களத்தூர்-கை. களத்தூர்" சாலை மேம்பாட்டுப் பணிகள் கலெக்டர் ஆய்வு!!
பெரம்பலூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ. 22.17 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர், வேப்பந்தட்டை மற்றும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மேலும் கூறியது:
போக்குவரத்து நெரிசல், கால விரயம் மற்றும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ரூ. 11 கோடி மதிப்பில் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையிலிருந்து, துறையூர் - பெரம்பலூர் வரை இணைக்கும் புறவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில், ஆலத்தூர் முதல் அரியலூர் வரை ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் சாலை, ரூ. 2 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் கட்டுமானப் பணிகளும், நபார்டு கிராமச்சாலை திட்டத்தின் கீழ் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் அகரம்சீகூர் முதல் தாமரைப்பூண்டி வரை ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பாரத பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், அய்யலூர் முதல் அ. குடிகாடு சாலை வரை ரூ. 163.26 லட்சம் மதிப்பீட்டிலும், ரஞ்சன்குடியிலிருந்து கை. களத்தூர் வழியாக வி.களத்தூர் வரை ரூ. 185.42 லட்சம் மதிப்பீட்டிலும், ஆர்.வி.கே சாலை முதல் திருவாளந்துறை சாலை ரூ. 53.83 லட்சம் மதிப்பீட்டிலும் சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படாத வகையில் சாலைவசதி மிக்க மாவட்டமாக உருவாக்க, சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றார் அவர்.
ஆய்வின் போது, இந்திய வெளியுறவுப் பணி அலுவலர் (பயிற்சி) கண்ணன், நெடுஞ்சாலைத் துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டப் பொறியாளர் வீ. கிருஷ்ணமூர்த்தி, உதவி கோட்டப் பொறியாளர்கள் அமிர்தலிங்கம் (தேசிய நெடுஞ்சாலை), வீரப்பன், உதவிப் பொறியாளர்கள் ராஜா, குமாரசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments