பெரம்பலூர் அருகே தொடரும் பீதி குட்டிகளுடன் வந்த சிறுத்தை விரட்டியடிப்பு!
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையம் கிராமத்தில் கொய்யாத் தோப்பு வழியாக மின்வாரிய அதிகாரி வீட்டருகே குட்டிகளுடன் வந்த சிறுத்தையை அப்பகுதி மக்கள் தீப்பந்தங்களை காட்டி விரட்டியடித்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள கவுல்பாளையம் மலையில் தங்கியிருந்த சிறுத்தை 25 ஆடுகளை வேட்டையாடியது. கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட சிறுத்தை சத்தியமங்கலம் அருகே பவானி ரேஞ்சிலுள்ள தலமலை காப்பு காட்டில் விடப்பட்டது.
தற்போது பெரம்பலூர் பறநகர் பகுதியில் சில சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது காலடி தடம் மூலம் கண்டறியப்பட்டது. இதனால் வனத்துறை, வருவாய்த் துறையினரோடு தீயணைப்புத் துறையினரும் சேர்ந்து புறநகர் பகுதிகளில் இரவு, பகலாக தேடுதல்வேட்டை நடத்தி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள வடக்கு மாதவி சாலையில், அம்மன் நகர் அருகேயுள்ள காட்டில் கூண்டு வைக்கப்பட்டது.
அதில் சிறுத்தை சிக்காத நிலையில், கடந்த 20ம் தேதி வண்டலூர் மிருகக்காட்சி சாலையிலிருந்து சிறுத்¬யைப் பிடிப்பதற்கும், பிடிபட்ட சிறுத்தையைக் கொண்டுபோய் விடுவதற்கும் மேலும் 2 கூண்டுகளை வனத்துறையினர் கொண்டு வந்தனர். அதில் ஒன்று வடக்கு மாதவி சாலையில் வாழைத்தோப்பு அருகே தற்போது வைக்கப்பட்டுள்ளது. அந்த கூண்டிற்குள் நேற்று இரவு ஒரு ஆட்டுக்குட்டியை இரையாக வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெரம்பலூர் கோனேரிப்பாளையம் பகுதியில் வசிக்கும் மின்வாரிய அதிகாரியான மின்னல் ஹபீப் வீட்டருகே பெரிய சிறுத்தையொன்று 2 குட்டிகளுடன் சென்றுள்ளன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தீப்பந்தங்களுடன் வீட்டிலிருந்து வெளியே வந்து சிறுத்தைகளை விரட்டி உள்ளனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments