பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை!!
பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் வேளாண் துறை இணை இயக்குநர் ப. சங்கரலிங்கம்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் 52 தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் யூரியா 750 டன், டி.ஏ.பி 1,000 டன், பொட்டாஷ் 600 டன், கூட்டு உரங்கள் 1,500 டன், தனியார் கடைகளில் யூரியா 2,000 டன், டி.ஏ.பி 500 டன், பொட்டாஷ் 400 டன், கூட்டு உரங்கள் 1,600 டன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
எனவே, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் கடைகளிலும் உரிய விலைக்கு வாங்கிப் பயன் பெறலாம். விவசாயிகள் வாங்கும் உரத்துக்கு ரசீது பெறுவதோடு, உர மூட்டைகளின் மீது அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் வாங்க வேண்டும்.
உர விற்பனை குறித்து புகார் அளிக்க விரும்புவோர் பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநரை 9047072743, வேளாண் அலுவலரை (தரக் கட்டுப்பாடு) 9047072756, பெரம்பலூர் வட்டார வேளாண் அலுவலரை 8144916148, ஆலத்தூர் வட்டார வேளாண் அலுவலரை 8608388197, வேப்பூர் வட்டார வேளாண் அலுவலரை 9843852444, வேப்பந்தட்டை வட்டார வேளாண் அலுவலரை 9443590920 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Category: மாவட்ட செய்தி


0 comments