சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள சந்தன கட்டைகளுடன் வாலிபர் கைது!
மீனம்பாக்கம், செப். 24-
சென்னை விமான நிலையம் வழியாக தங்கம் மற்றும் சந்தன கட்டைகள், மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகின்றன. சர்வதேச சந்தையில் விலை மதிப்புள்ள இவற்றை கடத்தி செல்வதன் மூலம் கோடி கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை கோலாலம்பூர் விமானத்திற்கு சென்ற பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த சாகுல் அமீது (34) என்பவரின் சூட்கேசில் விலை உயர்ந்த சந்தன கட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெட்டியை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் 55 கிலோ எடை சந்தன கட்டைகள் சிறுசிறு துண்டுகளாக இருந்தன. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடியாகும். சந்தன கட்டைகளை கடத்த முயன்ற சாகுல் அமீதை கைது செய்தனர். கட்டைகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாநில செய்தி


0 comments