குடும்பத்தை குழி தோண்டி புதைக்கும் T.V சீரியல்கள்.. உடையும் குடும்ப உறவுகள்!
இன்றைக்கு பெரும்பாலான தொடர்களில் கள்ள உறவுகள், இருதாரம், மாமியார் மருமகள் குழப்பம், பங்காளிச்சண்டை, நாத்தனார், அண்ணி பழிவாங்கும் நடவடிக்கை போன்றவை மிகைப்படுத்தி காட்டப்படுகிறது. இதைப் பார்க்கும் குடும்பங்களில் சந்தேக விதை விழுந்து உறவுகளுக்கு இடையே விரிசல் ஏற்பட காரணமாகிறது.
தொலைக்காட்சியே கதி
காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இதைப் பார்க்கும் பெண்கள் குடும்பத்தார்க்கு உணவளிப்பதைக் கூட மறந்துவிடுகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களை உபசரிப்பதில்லை, கணவன்களை கவனிக்காமல் வீண் வாக்குவாதம் செய்வது, குழந்தைகளை தேர்வு சமயத்தில் படிக்க விடாமல் தொடர்களைப் பார்ப்பது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்த தொடர்கள் பெண்களின் பண்பை பாதிப்படைய வைத்து மனநலத்தை சீர்குலைத்து விடும் சாதனமாக திகழ்கிறது என்பதே நிஜம்.
டிவி தொடர்களில் வருவதை தன் நிழ வாழ்க்கையில் நடக்கிறது என்றும், நான் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பெண்கள் பலர் மனநோய்க்கு ஆளாகின்றனர். அதேபோல் எங்கே தொடர்களில் நடப்பது போன்று நம் வாழ்க்கையிலும் நடந்து விடுமோ? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
அழியும் கூட்டு குடும்பம்
இன்றைய தொடர்களில் சவால் விடுவது, வில்லத்தனத்தால் வக்ர சிந்தனைகள், அழுகை, போன்ற காட்சிகளால் 99 சதவிகிதம் பெண்களிடையே பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொடர்கள் பெரும்பாலும் இருதாரத்தை ஆதரிக்கிறது. தவிர கள்ள உறவுகளுக்கு கடை விரிக்கும் இதுபோன்ற தொடர்களை பின்பற்றுவதால்தான் நிஜ வாழ்க்கையில் சண்டைகளும் இதனால் விவாகரத்து தற்கொலை முயற்சி மற்றும் கொலை முயற்சியிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள்.
அதிகரிக்கும் டிஆர்பி ரேட்டிங்
பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு, அரவணைப்பு, அர்ப்பணிப்பு போன்ற உயர்ந்த குணங்களை பெண்கள் தொலைக்காட்சி தொடர்களால் இழந்து வருகின்றனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இன்றைய தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கவும், வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்படுகின்றன என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மனதை அலைபாய வைக்கும் நடனம்
இன்றைய தொலைக்காட்சி அலைவரிசையில் ரியாலிட்டி ஷோ என்பது பிரபலமாக இருக்கிறது. அரை குறை ஆடை அணிந்த பெண்கள் ஆண்களை கட்டிப் பிடித்து, நடனம் ஆடுவதை, அரைகுறை ஆடை அணிந்த நடுவர்கள் மார்க் போடுகின்றனர். இதனால் தாய்மார்கள் தங்கள் பச்சிளம் பெண் குழந்தைகளின் ஆடை விஷயத்தில் தாராளம் காட்டி இந்த கலாச்சால சீரழிவிற்கு வழிவகுக்கிறார்கள்.
சேனல்களுக்கு சென்சார் வருமா?
இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சேனல்களுக்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஓரு தனியார் தொலைக்காட்சியில் நான்கு சுவர்களுக்குள் பேசித் தீர்க்கவேண்டிய விஷயத்தை ஊரறியப் பேசி கடைசிக கவுன்சலிங் என்ற பெயரில் எதையோ சொல்லி முடிக்கிறார்கள். கள்ளக்காதலும், கள்ளத்தொடர்புகளும் இங்கே பஞ்சாயத்து செய்யப்படுகின்றன.
அதிகரிக்கும் வன்முறை
இன்றைய தொடர்களில் பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போதல், கணவன்-மனைவி பிரிந்து வாழ்வது, கள்ளக்காதல், பெற்றோரை அவமதிப்பது, சூழ்ச்சி, சுயநலம், – இவைகளால் பின்னப்பட்ட சீரியல்களை தினமும் ஐம்புலன்களையும் ஒன்றுபடுத்தி கவனக்குறைவின்றி தவறாமல் பார்த்து மகிழும் பிள்ளைகளின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.
இரண்டு லட்சம் வன்முறை காட்சி
18 வயதை அடையும் முன் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வன்முறைக்காட்சிகளைப் பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பிள்ளைகள் தங்களின் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கிறார்கள் என்பதை சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாணவ சமுதாயத்திற்கும் குற்றங்களுக்கும் இடையே உள்ள தூரம் குறைய பொறுமை, சகிப்புத் தன்மை, மனிதநேயம் மிக்க இளைஞர்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
சமூகத்தை பாதிக்கும் தொடர்கள்
வியாபார நோக்கத்திற்காக தொலைக்காட்சி சானலை தொடங்கும் பணக்காரர்கள், அரசியல் கட்சிகள், அரசியல் புள்ளிகள் சமூக அக்கறையில்லாமல் எடுக்கப்படும் திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமூகத்தை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை உணரவேண்டும்.
தணிக்கை தேவை
சின்னத்திரையில் சில நிமிடம் வரும் விளம்பரங்களுக்கே தணிக்கை சானறிதழ் கட்டாயம் பெற வேண்டும் என சட்டம் இருக்கும் போது. அதிகம் பேர் பார்க்கும் தொடர்களுக்கும் நிச்சயம் தணிக்கை தேவை. மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை மட்டுமே காட்டுபவையாக தொலைக்காட்சிகள் மாற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
தரமான நிகழ்ச்சிகள்
தேவை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிக்கும்படியான, தரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
இதை செயல்படுத்தவேண்டிய பொறுப்பு அந்தந்த நாடுகளின் அரசுகளின் கையில் உள்ளது.
இளைய சமுதாயத்தை, எதிர்கால நல்ல சமுதயத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பு தங்களுக்கு உள்ளது என்பதை தொலைக்காட்சி சானல்களை நடத்துபவர்களும், அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.
Category:


0 comments