பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் அக். 8, 10-ல்!
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக். 8 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் விதமாக கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அக். 8-ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கும், 10-ம் தேதி பள்ளி மாணவர்களுக்கும் நடத்தப்படும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு, ஒரு மாணவர் வீதம் 3 போட்டிகளுக்கு மூன்று மாணவர்களை மட்டும் கல்லூரி முதல்வர், பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9 மணிக்கு வருகை தரவேண்டும். பரிந்துரைக் கடிதம் இல்லாமல் வரும் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க முடியாது. கவிதை, கட்டுரைகளுக்கான தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்னதாகவும், பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் தனித்தனியே துண்டுத் தாளில் எழுதப்பட்டு அட்டைப் பெட்டிக்குள் வைத்து பேசுவதற்கு 10 நிமிடத்திற்கு முன் பேச வேண்டிய தலைப்பு தெரிவிக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 10 ஆயிரமும், 2-வது பரிசாக ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 7 ஆயிரமும், சான்றிதழும் வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 10 ஆயிரமும், 2-வது பரிசாக ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 7 ஆயிரமும், சான்றிதழும் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். விவரங்களுக்கு 9443837390 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Category: மாவட்ட செய்தி


0 comments