பாடலூரில் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து 50 பவுன் நகை, வெள்ளி, பணத்தை அள்ளிச்சென்ற கொள்ளை கும்பல் வியாபாரி வீட்டில் பட்டப்பகலில் கைவரிசை!
பாடாலூர், செப்.27:
பெரம்பலூர் அருகே வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து வியாபாரி வீட்டில் 50 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த 8 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(52). திருச்சி& சென்னை மெயின் ரோட்டில் உரம், பூச்சிமருந்து, சிமென்ட் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடை மாடியில் இவரது வீடு உள்ளது.
நேற்று காலை 7.30 மணி அளவில் இவரது மகள் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் ஜெயப்பிரகாசும், அவரது மனைவி நிர்மலாவும் இருந்தனர். அப்போது இவரது வீட்டு முன் ஒரு வெள்ளை நிற இன்னோவா கார் வந்து நின்றது.
காரில் போலீஸ் உடையில் இருந்த 8 பேர் கீழே இறங்கினர். சிலரது உடையில் இன்ஸ்பெக்டர்கள் போல் ஸ்டார் இருந்தது. ஜெயப்பிரகாஷ் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினர். ஜெயப்பிரகாஷ் வந்து கதவை திறந்தா. அவரைப்பார்த்து அவர்கள் 8 பேரும், �நாங்க வருமானவரித்துறை அதிகாரிகள். உங்க வீட்டில் கருப்பு பணம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. வீட்டை சோதனை போடப்போறோம்� என்று கூறி 6 பேர் மட்டும் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். மீதி 2 பேர் வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டனர்.
வீட்டுக்குள் சென்ற 6 பேரும் பின்னர் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர். பின்னர், ஜெயப்பிரகாஷ், அவரது மனைவி ஆகியோரிடம் இருந்து செல்போன்களை பறித்துகொண்டு விசிட்டிங் கார்டை கொடுத்தனர். விசிட்டிங் கார்டில் வருமான வரித்துறை அலுவலக திருச்சி முகவரி இருந்தது.
�விசாரணைக்கு ஒத்துழைச்சா நல்லது. இல்லாட்டி பிரச்னை. என்னென்ன வியாபாரம் செய்றீங்க... ஆண்டு வருமானம் எவ்வளவு... இந்த ஆண்டு வருமான வரி கட்டினீர்களா... வீடு எப்ப கட்டினீங்க... எவ்வளவு ரொக்கம் வச்சிருக்கீங்க... நகை, சொத்து எவ்வளவு இருக்கு� என 3 பேர் அடுக்கடுக்காக கேள்வி கேட்டனர். 2 பேர் வீட்டின் அனைத்து அறைகளிலும் சோதனையிட்டனர். ஒருவர் சுவர்களை தட்டிப்பார்த்தவாறு சோதனை நடத்தினார்.
படுக்கை அறை, சமையல் அறை, கழிவறை, பூஜை அறை என அனைத்து அறைகளையும் சோதனை போட்ட அவர்கள் திடீர் திடீரென தரையை காலால் உதைத்து சோதிப்பது போல நடித்தனர். வீட்டில் ஒரு பையில் இருந்த ரொக்கம் ரூ.5 லட்சம், 50 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிபொருட்களை எடுத்து சாக்கு மூட்டையில் கட்டிக்கொண்டனர்.
ஒரு மணி நேர சோதனைக்கு பின், ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கு பின்னால் நிறுத்தியிருந்த அவரது காரின் டயரில் இருந்து காற்றை பிடுங்கி விட்டுவிட்டு 6 பேரும் தாங்கள் வந்த இன்னோவா காரில், �நாங்கள் அழைக்கும்போது திருச்சி ஆபீசுக்கு வந்தால் போதும்� என்று கூறிவிட்டு சென்றனர். வந்தவர்களுக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும். போகும்போது கார் டயரில் காற்றை பிடுங்கிவிட்டுச் சென்றதால், வந்தவர்கள் அதிகாரிகள்தானா என்ற சந்தேகம் ஜெயப்பிரகாசுக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக திருச்சியில் உள்ள வருமான வரி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போதுதான் வருமான வரி அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும், போலீஸ் உடையில் வந்தவர்கள் கொள்ளையர்கள் என்றும் தெரியவந்தது.
பதறிய அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். கூடுதல் எஸ்.பி. விஜயபாஸ்கர், டிஎஸ்பி சுருளியாண்டி மற்றும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் வந்த காரின் எண்ணைக்கொண்டு போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் வருமான அதிகாரிபோல் நடித்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த வீடு (மாடியில்).
Category: மாவட்ட செய்தி

0 comments