பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் வசதிகள்!
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன என்று ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 226 படுக்கை வசதிகள் உள்ள நிலையில், மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் விரிவாக்க கட்டடத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய புதிய தாய், சேய் மற்றும் மகப்பேறு சிகிச்சை பிரிவு செயல்பட உள்ளது.
மேம்படுத்தப்பட்ட தீவிர விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, இருதய தீவிர சிகிச்சை பிரிவு, 24 மணி நேரமும் செயல்படக் கூடிய அவசர கால பிரசவ பகுதி, பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, குருதி வங்கி, புற்று நோய் வலி தீர்க்கும் பிரிவு ஆகிய சிகிச்சை பிரிவுகளும், இருதய நோயை கண்டறிவதற்கான எக்கோ இயந்திரம், இருதய மின் வரைபட இயந்திரம், அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சோனா கிராம் ஸ்கேனர், டாப்ளர் எண்டாஸ்கோபி கருவி, எலும்பு சிகிச்சைக்கான பிரத்யேக கருவி, லேப்ராஸ்கோபி, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சி.டி4 இயந்திரம் ஆகிய நவீன மருத்துவ கருவிகளும் நோயாளிகளுக்கான பயன்பாட்டில் உள்ளன.
மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு இணையாக தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், 7 சிறப்பு சிகிச்சை மருத்துவர் பணியிடங்களும், 23 சிறப்பு சிகிச்சை மருத்துவர் பணியிடங்களும், 31 செவிலியர் பணிடங்களும், 2 நுண் கதிர்வீச்சாளர் மற்றும் ஆய்வு கூட நுட்புநர் பணியிடங்களும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளின் காரணமாக, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் லேப்ராஸ்கோபிக் மூலமாக பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை, இடுப்பு பந்து கிண்ண மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, உடலில் உருவாகும் தேவையற்ற பெரிய கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி முதல் மே வரை 534 உள் நோயாளிகளுக்கும், 2,332 வெளி நோயாளிகளுக்கும் சிடி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் டயாலிசிஸ் சென்டர் மூலம் 726 நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் குறைந்த விலையில் உணவுப் பொருள்களை பெறுவதற்காக அரசு தலைமை மருத்துவ மனையில் அம்மா உணவகத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
Category: மாவட்ட செய்தி


0 comments