துபாயில் குடி போதையில் காதலரை குத்திக் கொன்ற ரஷ்யப் பெண் கைது!
துபாய், ஆக.19
இதரப் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து, காதலருடன் குடி போதையில் தகராறு செய்த ரஷ்யப் பெண், அவரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் துபாயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயின் அல் குவசைஸ் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் ஒன்பதாவது தளத்தில் வசித்து வந்த அராபியர் ஒருவரை அதே பகுதியில் வசிக்கும் 32 வயது ரஷ்யப் பெண், உயிருக்குயிராக காதலித்து வந்தார்.
ஓராண்டுக்கும் மேலாக இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமலேயே கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில், அந்த அராபியரின் போக்கில் மாற்றத்தை உணர்ந்த அந்தப் பெண், தனது காதலருக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்தார்.
சம்பவத்தன்று, குடி போதையில் இருந்த அந்தப் பெண், காதலரின் வீட்டுக்குச் சென்று இது தொடர்பாக அவருடன் தகராறு செய்தார். அந்த நபரும் எதிர்த்துப் பேச, இருவருக்குள்ளும் அடிதடி சண்டை ஏற்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த அந்த ரஷ்யப் பெண், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அந்த அராபியரின் கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினார். கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தனது தோழிக்கு போன் செய்து, போதையில் தனது காதலரைக் கொன்று விட்டதாக அந்தப் பெண் தெரிவிக்க, இந்த தகவலை அவர் போலீசாருக்கு தெரியப்படுத்தினார்.
இதனையடுத்து, அந்த ரஷ்யப் பெண் வசித்து வந்த ஒன்பதாவது மாடி பகுதிக்கு விரைந்துச் சென்ற போலீசார், பலியானவரின் பிரேதத்தையும், கொலை ஆயுதமான கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Category: வளைகுட செய்தி


0 comments