சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் சிக்கியது பெண் உள்பட 2 பேர் கைது!
மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பெண் உள்பட 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மலேசியா விமானம்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகளும், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் கண்காணித்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த இதயதுல்லா (வயது 29) என்பவர் சுற்றுலா விசாவில் மலேசியா சென்று விட்டு திரும்பி வந்திருந்தார்.தங்கம் கடத்தல்
அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரது சூட்கேசில் ரகசிய அறைகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அதற்குள் 7 தங்க கட்டிகளை கறுப்பு வர்ணம் பூசி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக இதயதுல்லாவை கைது செய்தனர்.
மேலும் அவருடன் வந்த குடியுரிமை அதிகாரி ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர், ‘‘விமானத்தில் ஒன்றாக வந்தோம். மற்றபடி எங்களுக்குள் எந்த வித தொடர்பும் இல்லை’’ என்றார். நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் குடியுரிமை அதிகாரியை சுங்க இலாகா மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விடுவித்தனர்.பெண் கைது
இதேபோல் மலேசியாவில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் சென்னையைச் சேர்ந்த பிரேமா (40) என்பவர் வந்திருந்தார். அவரை பெண் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது கைப்பையிலும், உடையிலும் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிரேமாவை கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 4 கிலோ தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் இது தொடர்பாக கைதான பெண் உள்பட 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்
Category: மாநில செய்தி

0 comments