அரசு பள்ளியில் அவலம் 2 ஆசிரியர்கள்.. 3 மாணவர்கள்...!
கமுதி. ஆக. 27:
கமுதி அருகே 3 மாணவர்கள் மட்டுமே பயிலும் அரசு பள்ளியில் 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் பணியில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே காடாமாங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாங்குளத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 3 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் 4ம் வகுப்பிலும் மற்ற இருவர் 5ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். மூன்று மாணவர்கள் மட்டுமே படிக்கும் இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு சத்துணவு அமைப்பாளர், 2 உதவியாளர்கள் என 5 பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்காக அரசு மாதந்தோறும் சம்பளம் மற்றும் இதர செலவுகள் என ரூ.80 ஆயிரம் வரை வழங்கி வருகிறது.
தொடக்கப்பள்ளி என்பதால் தற்போது 5ம் வகுப்பு பயிலும் மாணவிகள் இருவரும், அடுத்த கல்வியாண்டில் வேறு பள்ளியில் சேர்ந்துதான் படிக்க வேண்டும். இதனால் அடுத்த ஆண்டு பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே படிப்பார். அவரும் வேறு பள்ளியில் 5ம் வகுப்பில் சேர்ந்து விட்டால், 2 ஆசிரியர்கள், 3 பணியாளர்கள் என மாணவர்களே இல்லாமல் பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்படும். கிராம மக்கள் கூறுகையில், �வறட்சி காரணமாக பலர் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர். கிராமத்தில் மக்கள்தொகையே குறைவுதான். அதனால் பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது� என்கின்றனர்.
கமுதி வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் அண்ணாத்துரையிடம் கேட்டபோது, ��பள்ளியின் நிலை குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அடுத்த கல்வியாண்டில் தற்காலிகமாக பள்ளி மூடப்படும் வாய்ப்பு உள்ளது,” என்றார்.
3 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.
Category: மாணவர் பகுதி


0 comments