உலகிலேயே நோபல் பரிசு பெறும் முதல் அராபியப் பெண்.!
இளம் நோபல் பெண் தவக்குல் கர்மான். இவர் நாவளம் மிக்கவரும் கூட. அவர் அணிந்திருக்கும் ஹிஜாப் (இஸ்லாமிய பெண்கள் அணியும் அங்கி) பற்றி பத்திரிக்கையாளர்கள் அவருடைய அறிவுத்திறனுக்கும், கல்வித் தகுதிக்கும் அது ஏற்றதாக உள்ளதா என கேட்ட போது அவர் கூறிய பதில்:
‘பண்டைய கால மனிதன் பெரும்பாலும் நிர்வாணமாக இருந்தான். அவன் அறிவு வளர வளர அவன் ஆடைகளை அணியத் துவங்கினான். நான் இன்று யாராக இருக்கிறேனோ, என்ன அணிந்திருக்கிறேனோ, அது மனிதன் அடைந்துள்ள எண்ணங்கள் மற்றும் நாகரிகத்தின் உச்சத்தை பிரதிபலிக்கிறதே தவிர, பின்னடைவையல்ல. ஆடைகளை மீண்டும் களைவது தான் பின்னடைவாகும்.’
மனித உரிமை ஆர்வலர், இதழியலாளர், அரசியல்வாதி எனப் பல முகங்களைக் கொண்டவர் ஏமன் நாட்டைச் சேர்ந்த தவக்குல் கர்மான். பெண்களுக்கென கட்டுப்பாடுகள் நிறைந்த அரபு நாட்டில் பிறந்தாலும் வர்த்தகப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அத்துடன் தன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாமல் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும், சட்டக்கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார்.
மனித உரிமை பாதுகாப்புக்காக 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஏமனியப் புரட்சியில் அலி அப்துல்லா சாலேவின் அரசுக்கு எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கினைத்தார். போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். சிறையில் இருந்து வெளிவந்தாலும் சோர்ந்து போகாமல் மீண்டும் போராட்டங்களைக் கையிலெடுப்பார். பிப்ரவரி மூன்றாம் நாளை ‘பெருங்கோப நாள்’ என்று அறிவித்தார்.
பெண்களின் பாதுகாப்புக்காக, ‘சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள்’ என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் இருக்கிறார். பெண்கள் முன்னேற்றத்திற்கு குரல் கொடுத்த அதே நேரத்தில் ஊடகங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். ஏமன் நாட்டு மக்களால் ‘இரும்புப் பெண்மணி’ ‘புரட்சித் தாய்’ என அழைக்கப்படுகிறார்.
2011-ம் ஆண்டு லிபேரியா நாட்டின் எல்லென் ஜான்சன், லேமா குபோவீ ஆகியோருடன் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பு, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், பெண்கள் உரிமைகளுக்கான வன்முறையற்ற போராட்டம் ஆகியவற்றுக்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
உலகிலேயே நோபல் பரிசு பெறும் முதல் அராபியப் பெண்ணாகவும், இரண்டாவது இஸ்லாமியப் பெண்ணாகவும் வரலாறு படைத்துள்ளார் தவக்குல் கர்மான். உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பெண்ணும் இவர்தான். தான் பெற்ற நோபல் பரிசை ஏமன் நாட்டு பெண்களுக்கு அர்பணிப்பதாகக் கூறியிருக்கிறார் தவக்குல் கர்மான்.
Roshan Banu
Category: வளைகுட செய்தி
0 comments