துபாயில் ரமலானன்று தவறவிட்ட 25 ஆயிரம் திர்ஹத்தை வெளிநாட்டவரிடம் திருப்பி ஒப்படைத்த இந்தியர்!
துபாய்,
ரஹீல் பச்சேரி (36) என்ற இந்தியர் ஒருவர் ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வதற்காக அருகில் உள்ள மசூதிக்கு சென்றுள்ளார். தலைநகர் அபுதாபியின் சாலை ஓர பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்த போது செல்லும் வழியில் கீழே ஒரு நீல நிற பர்ஸ் கிடப்பதை பார்த்தார். ஆச்சர்யமடைந்த அவர் அதை பிரித்து பார்த்த போது அதில் நிறைய கிரெடிட் கார்டுகளும், 500 திர்ஹம் நோட்டுகளும், பல முக்கிய ஆவணங்களும் இருந்தன. அதிலிருந்த பணத்தின் மதிப்பு 25000 திர்ஹம் அதாவது இந்திய மதிப்பில் ரூ.4 லட்சம்.
இதை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணினார் பச்சேரி. முகவரி ஏதாவது பர்ஸில் இருக்கிறதா என்று தேடிப் பார்த்த போது அதிலிருந்த டிரைவிங் லைசென்ஸ்-ல் குறிப்பிடப்பட்டிருந்த போன் நம்பரை தொடர்பு கொண்டு நடந்ததை கூறினார்.
இந்நிலையில், ஏற்கனவே, பர்ஸூக்கு சொந்தக்காரரான எலிவிரா என்பவர் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்திருந்தார். அதில், தான் தொலைத்த பர்ஸில் இத்தாலிய ஆவணங்கள், தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் ஊருக்கு செல்ல விமான டிக்கெட் வாங்குவதற்காக வைத்திருந்த 25 ஆயிரம் திர்ஹம் பணம் இருந்ததாக கூறியிருந்தார்.
இத்தாலியரான அவர் தனது கணவர் நெஞ்சு வலிக்காக அபுதாபியில் ஒரு பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை பார்த்துவிட்டு செல்வதற்காக துபாய்க்கு தனது குழந்தைகளுடன் வந்த விபரத்தையும் ரஹீலிடம் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார். அத்துடன் பணத்தை திருப்பி ஒப்படைத்த நேர்மைக்காக சிறிது பணத்தை அன்புள்ளத்தோடு மறுக்காமல் வாங்கிக் கொள்ளுமாறு ரஹீலுக்கு கொடுத்திருக்கிறார் எலிவரா.
புனித ரமலான் தினத்தன்று நேர்மையை பறைசாற்றும் வண்ணம் செயல்பட்ட இந்தியரின் மாண்பு பெருமை கொள்ளத்தக்கது.
Category: அபுதாபி
0 comments