2013–ம் ஆண்டில் இந்தியா முழுவதும் ரூ.13 ஆயிரம் கோடி பொருட்கள் திருட்டு திருட்டு பொருட்களை மீட்டதில் தமிழகம் முதலிடம்!
புதுடெல்லி,
நாடு முழுவதும் கடந்த 2013–ம் ஆண்டில் நடந்த திருட்டு சம்பவங்களில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களை மக்கள் இழந்துள்ளனர். திருட்டு பொருட்களை மீட்டதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.2–வது அதிகபட்சம்
நாடு முழுவதும் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நாடு முழுவதும் ரூ.13 ஆயிரத்து 219 கோடி அளவிலான பணம் மற்றும் பொருட்கள் கடந்த ஆண்டு திருடப்பட்டு உள்ளதாக தேசிய குற்ற ஆவணத்துறை தெரிவித்து உள்ளது.
இது கடந்த 10 ஆண்டுகளில் 2–வது அதிகபட்சம் ஆகும். 2012–ம் ஆண்டில் அதிபட்சமாக சுமார் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தன.
மராட்டியத்தில் அதிகம்
கடந்த ஆண்டு திருட்டு போன பொருட்களில் பெரும்பாலானவை (30 சதவீதம்) வாகனங்கள் ஆகும். டெல்லியில் தான் அதிகப்படியான வாகனங்கள் திருடப்பட்டு உள்ளன. இங்கு திருட்டுப்போன வாகனங்களின் எண்ணிக்கை, கொல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய 3 நகரங்களில் திருடப்பட்ட வாகனங்களின் மொத்த எண்ணிக்கைக்கு சமமாகும்.
மேலும் இந்த ஆண்டிலும் பணம், நகைகள் மற்றும் வாகனங்கள் தான் அதிகமாக திருடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மராட்டிய மாநிலம் ரூ.4 ஆயிரத்து 315 கோடி மதிப்பிலான பொருட்களை இழந்து முதலிடத்திலும், ரூ.3 ஆயிரத்து 48 கோடி மதிப்பிலான பொருட்களை இழந்து கோவா 2–ம் இடத்திலும் உள்ளன.
மீட்பில் தமிழகம் முன்னணி
கடந்த ஆண்டு கொள்ளை போன பொருட்களில் வெறும் ரூ.1,762 கோடி மதிப்பிலான பொருட்களே மீட்கப்பட்டு உள்ளன. இது கடந்த 10 ஆண்டுகளில் 2–வது குறைந்தபட்சம் ஆகும்.
கொள்ளை போன பொருட்களை மீட்டதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இங்கு கொள்ளை போனதில் 73.6 சதவீத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 51.9 சதவீத பொருட்களை மீட்ட சிக்கிம் 2–ம் இடத்திலும், 51.7 சதவீத பொருட்களை மீட்ட ஆந்திரா 3–ம் இடத்திலும் உள்ளன. மிக மோசமான அளவாக 0.1 சதவீத பொருட்களையே கோவா மாநில போலீசார் மீட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி மொத்தம் 26 லட்சத்து 47 ஆயிரத்து 722 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக மராட்டியத்தில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 385 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 453 வழக்குகளும், உத்திரபிரதேசத்தில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 445 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 579 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
Category: மாநில செய்தி

0 comments