பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் சாவு!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்வாரிய ஊழியர்கள்
பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா மகன் பன்னீர்செல்வம்(வயது43), மின்வாரிய ஊழியர். இவரும் மற்றொரு ஊழியரான திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த தழுதாழைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் சிதம்பரமும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்றில் நேற்று மாலை 4.30 மணியளவில் மின்சாரத்தை நிறுத்தி விட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள லிப்ட் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்கு வந்த போது லிப்ட் பாதியிலேயே திடீரென நின்றது. இதனால் லிப்ட்டில் பயணம் செய்தவர்கள் சத்தம் போட்டனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திலிருந்த எலக்ட்ரீசியன் டிரிப்பரை மாற்றாமல் ஜெனரேட்டரை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த பன்னீர்செல்வம் மற்றும் சிதம்பரம் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மின்சார தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிதாப சாவு
அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மூச்சு திணறல் ஏற்பட்டு பன்னீர்செல்வம் இறந்தார். சிதம்பரம் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments