பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 5.68 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் தரேஸ் அஹமது ஆய்வு!
பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 5.68 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 70 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு மாணவிகள் தங்கும் விடுதி, புறநகர் பேருந்து நிலையம் அருகே ரூ. 1.5 கோடியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடம், ரோவர் பள்ளி அருகே ரூ. 1.45 கோடியில் கட்டப்பட்டு வரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, கட்டடப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, 2 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரம் ரூபாயில் ஆலத்தூரில் கட்டப்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தையும், கீழக்கணவாயில் கட்டப்படவுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகள் விடுதிக்கான இடத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, உதவிச் செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், செல்வராஜன், உதவிப் பொறியாளர்கள் சிவகுருநாதன், வரதராஜன், ஜெயந்தி, கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments