ஆபாச கதவை திறந்து விடும் கூகுள்? பரபரப்பு புகார்!
இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக ‘கூகுள்’, ‘யாஹூ’ உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் (சர்ச் என்ஜின்) உதவுகின்றன. இவற்றில் ‘கூகுள்’ தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் கூகுள் வாயிலாகவே இதர இணைய தளங்களுக்குள் நுழைகின்றனர்.
அவ்வகையில், உலகளாவிய அளவில் இணையதளங்களுக்கான ‘சர்ச் என்ஜின்’களில் ஜாம்பவானாக ‘கூகுள்’ திகழ்ந்து வருகிறது.
இந்தியாவில் இந்நிறுவனத்துக்கான தலைமை அலுவலகம் ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் அமைந்துள்ளது.
இதன் அலுவலக மேலாளர் மீது உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி அருகேயுள்ள பட்டேல் நகர் பகுதியில் வசிக்கும் வினித் குமார் சிங் என்பவர் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றையளித்துள்ளார்.
அதில், கூகுள் நிறுவனத்தின் ‘பிளே ஸ்டோர் அப்ளிகேஷன்’ மூலம் ‘ஆண்ட்ராய்ட்’ ரக செல்போன்களை வைத்திருக்கும் சிறுவர், சிறுமியர் சுலபமாகவும், இலவசமாகவும் உடலுறவு காட்சிகள் அடங்கிய ஆபாச படங்களை பார்ப்பதற்கான தலைவாசலாக கூகுள் தேடு இயந்திரம் இருந்து வருகிறது.
இவற்றை பார்ப்பவர்கள் பருவ வயதை அடைந்தவர்களா? இல்லையா? என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் ஆபாச வலைத்தளங்களுக்கு செல்லும் வாசல் கதவை திறந்து விடும் கூகுள் நிறுவனம் மற்றும் அதன் இந்திய அலுவலக மேலாளர் மீது உடனடியாக உரிய நடவக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Category: மாநில செய்தி
0 comments