செயின் பறிப்பை கட்டுப்படுத்த பெண்களுக்கு போலீசார் அறிவுரை!
சென்னை, டிச. 2–
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை எடுத்து வந்தாலும், மோட்டார் சைக்கிளில் சுற்றும் செயின் பறிப்பு கொள்ளையர்கள், சர்வ சாதாரணமாக செயினை பறித்துச் சென்று விடுகிறார்கள்.
தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து போலியான நம்பர் பிளேட்டுடன் கூடிய திருட்டு மோட்டார்சைக்கிள்களில் வலம் வரும் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை தினமும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மோட்டார்சைக்கிள்களில் வேகமாக வந்து செயினை பறிக்கும் போது நிலை குலைந்து போகும் பெண்கள் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைவதும் வாடிக்கையாகி விட்டது.
2 நாட்களுக்கு முன்னர் கொடுங்கையூர் மூதாட்டி ஒருவரை கீழே தள்ளி விட்டு வாலிபர் ஒருவர் செயினை பறித்துச் சென்றார். இப்படி பெண்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையிலும் கொள்ளையர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்களுக்கு தங்கத்தின் விலை உயர்வும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. படித்து விட்டு வேலையில்லாமல் ஊர் சுற்றும் வாலிபர்கள் பலர் இதனை தொழிலாகவே செய்வதாக போலீஸ் அதிகாரி ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
ஒரு தெருவில் பறிக்கும் செயினை அடுத்த தெருவில் அடகு வைத்து பணமாக்கிக் கொள்ளலாம் என்பதால், கொள்ளையர்களுக்கு செயின் பறிப்பு தொழில் மிகவும் வசதியாக இருக்கிறது.
பெரும்பாலான அடகு கடைகளில் திருட்டு நகை என்றே தெரிந்தும் அதனை துணிச்சலாக வாங்கிக் கொள்கிறார்கள். இதற்கு முன்னர் இதுபோன்ற அடகு கடைக்காரர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள். இப்போதும் அது போன்று செய்தால் செயின் பறிப்பு குற்றங்கள் ஓரளவுக்கு குறையலாம்.
இப்படி சென்னையில் பீதியை ஏற்படுத்தி இருக்கும் செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த பெண்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று, போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்த யோசனைகள் வருமாறு:–
* செயினை அணிந்து கொண்டு வெளியில் செல்லும் பெண்கள் அது வெளியே தெரியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
* ஜாக்கெட்டில் பின் குத்தி பாதுகாப்பாக செயின் அணிய வேண்டும்.
* சேலை அணிந்து செல்பவர்கள் முந்தானையால் செயினை மறைத்துக் கொள்ளலாம்.
* சுடிதார் அணிந்து செல்லும் பெண்கள் கழுத்தை ஒட்டி துப்பாடவை அணிந்து செயினை மறைத்துக் கொள்ள வேண்டும்.
* காலருடன் கூடிய சுடிதாரை அணிந்து செயின் வெளியில் தெரியாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.
* நீங்கள் செல்லும் பாதையில் சந்தேகத்துக்கிடமாக யாராவது சுற்றி திரிவது தெரிந்தால் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு (எண்–100) போன் செய்ய வேண்டும்.
* திருமண மண்டபங்கள் இருக்கும் பகுதிகளில் விழாக்கள் நடைபெறும் போது, மோட்டார்சைக்கிளில் யாராவது சுற்றி வந்தால் அவர்கள் பற்றியும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கூறிய போலீஸ் அதிகாரி, இது தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், போர்டுகள் ஆகியவற்றையும் வைத்துள்ளோம் என்றார்.
செயின் பறிப்பை கட்டுப்படுத்த பெண்களுக்கு அறிவுரை வழங்கும் அதேவேளையில் உயர் அதிகாரிகளாக இருக்கும் சிலர் தங்களது பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கண்டு கொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதற்கு முன்பு தலைமை பொறுப்புகளில் இருந்த அதிகாரிகள் பலர் சுறுசுறுப்புடன் பணியாற்றி, கீழ்மட்டத்தில் இருக்கும் போலீசாரின் சோர்வையும் போக்கினர். இதுபோன்ற அதிகாரிகள்தான் சென்னை மாநகருக்கு இன்று தேவை.
விழித்துக் கொள்ளுமா? காவல் துறை? பொறுத்திருந்து பார்ப்போம்.
Category: மாநில செய்தி


0 comments