வேப்பந்தட்டை தாலுகாவில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை!
வேப்பந்தட்டை,
வேப்பந்தட்டை தாலுகாவில் கிராம நிர்வாக அதிகாரிகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிராம நிர்வாக அதிகாரிகள் பற்றாக்குறை
வேப்பந்தட்டை தாலுகாவில் வெங்கலம், பசும்பலூர், வாலிகண்டபுரம் ஆகிய 3 பிர்கா பகுதிகள் உள்ளன. வெங்கலம் பிர்கா பகுதியில் உள்ள 14 வருவாய் கிராமத்தில் 12 கிராம நிர்வாக அதிகாரிகளும், வாலிகண்டபுரம் பிர்கா பகுதியில் உள்ள 13 வருவாய் கிராமத்தில் 10 கிராம நிர்வாக அதிகாரிகளும், பசும்பலூர் பிர்கா பகுதியில் உள்ள 11 வருவாய் கிராமத்தில் 6 கிராம நிர்வாக அதிகாரிகளும் மட்டுமே பணிபுரிகிறார்கள்.
அதாவது வேப்பந்தட்டை (தெற்கு), வெங்கலம் (மேற்கு), பிம்பலூர், நெய்குப்பை, மேட்டுப்பாளையம் (வடக்கு), நூத்தப்பூர் (வடக்கு), கை.களத்தூர் (மேற்கு), பில்லாங்குளம், காரியானூர், பசும்பலூர் (வடக்கு) ஆகிய 10 வருவாய் கிராமங்களில் தனியாக கிராம நிர்வாக அதிகாரிகள் இல்லாமல் மற்ற கிராமங்களில் பணிபுரியும் அதிகாரி கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்கள்.
நிரப்ப வேண்டுகோள்
இன்றைய காலகட்டத்தில் பட்டா மாற்றம், வருமான சான்று, இருப்பிட சான்று, ஜாதி சான்று, பிறப்பு, இறப்பு சான்று, சிட்டா அடங்கல், உதவித்தொகை, நிவாரணத்தொகை என எந்த தேவையானாலும் அதற்கு கிராம நிர்வாக அதிகாரியின் கையொப்பம் அவசியமாக தேவைப்படுகிறது. இந்நிலையில் ஒரு கிராம நிர்வாக அதிகாரி பல ஊர்களில் பொறுப்பு வகிப்பதால் பயனாளிகள் கிராம நிர்வாக அதிகாரியைத் தேடி அலைய வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் ஒரு அதிகாரி பல ஊர்களில் பொறுப்பு வகிக்கும் போது பயனாளிகள் கேட்கும் சான்றுகளை உடனே வழங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள 38 கிராம நிர்வாக அதிகாரி பணியிடத்தில் காலியாக உள்ள 10 பணியிடத்தை உடனே நிரப்பி உத்தரவிட வேண்டும் என முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments