பெரம்பலூர் அருகே கன்றுகுட்டியை அடித்து கொன்று சிறுத்தை மீண்டும் அட்டகாசம்!
பெரம்பலூர், நவ.20-
பெரம்பலூர் அருகே கன்றுகுட்டியை அடித்து கொண்டு மீண்டும் சிறுத்தை அட்டகாசம் செய்து உள்ளது.
சிறுத்தை
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. ஏற்கனவே பெரம்பலூர் கவுல்பாளையம் மேற்கு பகுதியில் அட்டகாசம் செய்த சிறுத்தையை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்து சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்,
இப்போது எளம்பலூர் உப்பு ஓடை பகுதியில் சிறுத்தை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் காட்டில் சிறுத்தை புகுந்தது.
அங்கு நின்று கொண்டு ஒரு பசுவின் காலை கடித்து தின்றது. இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் சிறுத்தை வந்தது.
பசுங்கன்றை கொன்றது
அங்கு ஒருவரின் தோட்டத்தில் கட்டப்பட்டு இருந்த கன்று குட்டியை அந்த சிறுத்தை அடித்து கொன்றது. சிறிது நேரத்தில் அங்கு வந்த அந்த பகுதி பொது மக்கள் கன்றுக்குட்டியின் பாதி உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வருவாய்த்துறையினர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையையும் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும் என்றும் கிராம பொது மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பகுதியில் ஒரு பெண் சிறுத்தை தனது குட்டிகளுடன் நடமாடி வருவதாக அப்பகுதி பொது மக்கள் கூறினர். சிறுத்தையின் நடமாட்டம் இந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Category: மாவட்ட செய்தி


0 comments