எஸ்.பி., நியமிக்க வேண்டும் பெரம்பலூர் மக்கள் கோரிக்கை!
பெரம்பலூர்: "பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.பி., பணியிடம் காலியாக உள்ளதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., நியமிக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், மருவத்தூர், குன்னம், அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மங்கலமேடு, பாடாலூர் ஆகிய எட்டு போலீஸ் ஸ்டேஷன்களும், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையமும் செயல்பட்டு வருகிறது.
டி.எஸ்.பி., அலுவலகம் இதுவரை செயல்பட்டு வந்தது. தற்போது பெரம்பலூர் இரண்டாக பிரிக்கப்பட்டு மங்கலமேடு டிவிசன் புதியதாக உருவாக்கப்பட்டு டி.எஸ்.பி., அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராம பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகவும், விற்பனை செய்யப்படுவதாகவும் காலைக்கதிரில் அக்., 11ம் தேதி ஃபோட்டோவுடன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்துக்குட்பட்ட கிராம பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனையால் டாஸ்மாக் மதுபான விற்பனை பாதிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி., மகேஷின் மெத்தனப்போக்கே காரணம் என்பதால் அக்., 11ம் தேதி செய்தி வெளியான அன்றே பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., மகேஷ், தேனி மாவட்டத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., பணியிடம் நிரப்பப்படாமல் இருந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தை அரியலூர் எஸ்.பி.,யே கூடுதலாக கவனித்து வருகிறார்.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் துறைக்கு எஸ்.பி.,யே உயரதிகாரி என்பதால் எஸ்.பி., பணியிடம் காலியாக உள்ளது போலீஸ் துறை சம்பந்தப்பட்ட பல்வேறு பணிகள் கிடப்பில் உள்ளது.
எனவே, உடனடியாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments