தமிழகத்தில் முதல்முறையாக அஞ்சல் துறையில் A.T.M. சேவை!
அஞ்சல் துறையும் வங்கிகளுக்கு இணையாக அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டு வரப்போகிறது. முதற்கட்டமாக, ஏடிஎம் சேவை அடுத்த மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தின் முதல் ஏடிஎம் மையம், தி.நகர் அஞ்சல் அலுவலகத்தில் அமைக்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னை மண்டல போஸ்ட் மாஸ் டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:
அஞ்சல் துறையும், வங்கிகளுக்கு இணையாக நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வரப் போகிறது. முதற்கட்டமாக, தி.நகர், கிரீம்ஸ் ரோடு, டிபிஐ வளாகம் மற்றும் காரைக்குடி ஆகிய 4 அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளை ‘கோர் பேங்கிங்‘ சிஸ்டம் மூலம் இணைத்துள்ளோம். இந்த 4 அலுவலக சேமிப்பு கணக்குகள் முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, 4 அஞ்சல் அலுவலகத்திலும் ஏடிஎம் மையம் அமைக்கப் படுகிறது. இதில், தி.நகரில் யி5 லட்சம் செலவில் கட்டப்படும் ஏடிஎம் மையம் அடுத்த மாத இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதற்காக, இங்கு கணக்கு வைத்துள்ளவர்களின் கணக்கு எண்ணை 16 இலக்கமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள்ளாகவே தமிழகம் முழுவதிலும் உள்ள 12,000 அஞ்சல் அலுவலகத்திலும் ஏடிஎம் வசதி ஏற்படுத்தப்படும்.
நெட் பேங்கிங் வசதி
ஏடிஎம் வசதியுடன் நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதியையும் அஞ்சல் துறை கொண்டு வர உள்ளது. நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற வசதிகள் அடுத்த ஆண்டு இறுதியில் கொண்டு வரப்படும் என மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
Category: மாநில செய்தி

0 comments