பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம்!
பெரம்பலூர், அக். 1:
பெரம்பலூர் மாவட்ட புதிய கோட்ட பொறியாளர் அலுவலகத்துக்கு 10 புதிய பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திலிருந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் 1995 அக்டோபர் 25ம் தேதி வருவாய் ரீதியாக பிரிக்கப்பட்டது. பெரும்பாலான அரசு துறைகளின் மாவட்ட தலைமை அலுவலகங்கள் பிரிக்கப்பட்டபோதும், நெடுஞ் சாலைத் துறை கோட்ட பொறி யாளர், பொதுப்பணித் துறை கோட்ட பொறியாளர் உள்ளிட்ட சில அலுவலகங்கள் பிரிக்கப்படாமல் இருந்தன. 1997 ஜனவரி 11ம் தேதி தான் பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கான நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் விழுப்புரத்திலிருந்து பிரிக்கப்பட்டு அரியலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட துவங்கியது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் மட்டுமே செயல்பட்டு வந்தது. இதில் திடீர் திருப்பமாக 2002ம் ஆண்டு அரியலூரிலிருந்து பெரம்பலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் தனியாக பிரிக்கப் பட்டு செயல்பட துவங்கியது. இந்நிலையில் அடுத்த 7 மாதங்களில் மீண்டும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் அரியலூருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசால் நடத்தப்பட்ட கலெக்டர்கள் மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறைக்கான கோட்ட பொறியாளர் அலுவலகம் பிரிந்து செயல் படும் என்று அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், இளநிலை வரைதொழில் அலுவலர், உதவியாளர், தட்டச்சர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 10 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 38வது நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் விரைவில் செயல்படவுள்ளது. இதன்மூலம் அரசால் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக இருக்கும். சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் துவங்கி நடைபெறும்.
இனிமேல் அரியலூர் கோட்ட பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் அரியலூர் செந்துறை, ஜெயங்கொண்டம் உட்கோட்டங்களும், பெரம்பலூர் கோட்ட பொறியா ளர் அலுவலக கட்டுப்பாட்டில் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை உட்கோட்டங்களும் செயல்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 669.915 கிலோமீட்டர் சாலைகள் பெரம்பலூர் கோட்ட பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டி லும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 756.779 கிலோமீட்டர் சாலைகள் அரியலூர் கோட்ட பொறி யாளர் அலுவலக கட்டுப்பாட்டிலும் இருக்கும்.
இதைதொடர்ந்து தொடக்க விழா பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர். தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் இன்று (1ம் தேதி) பெரம்பலூர் கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கான இடங்களை பார்வையிடவுள்ளனர்.
Category: மாவட்ட செய்தி

0 comments