பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி!
பெரம்பலூர், அக். 23:
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு பிபிஓ கால் சென்டர்களில் பணியாற்றுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்ற உன்னத நோக்கில் டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்தின் மூலம் இலவச வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி இரண்டாம் கட்டமாக நடத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி முதல் 27 நாள்கள் நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற 75 பட்டதாரிகளில் தகுதியுடையவர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, 2013 மற்றும் 2012ம் ஆண்டுகளில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் இறுதித் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்கு காத்திருப்பவர்களுக்கும் தற்போது பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இருப்பினும் இதில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். பிஎஎஸ்சி ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ, பிஏ எக்னாமிக்ஸ், டிப்ளமோ பட்டங்கள் பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆயினும் இவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு தங்களது திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் தகவல் பரிமாற்றம் செய்தல், தன்னம்பிக்கை வளர்த்தல் ஆகியன குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் இறுதியில் டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்தினர் பிபிஓ கால்சென்டரில் பணிபுரிய நேர்முகதேர்வு நடத்தி, தகுதியானவர்களை தேர்வு செய்வர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ10 ஆயிரம் முதல் ரூ 13 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென்று சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள பதிவு மையத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் இலவசமாக வழங்கப்படும். தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்திசெய்து நவம்பர் 4&ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து, இப்பயிற்சியானது நவம்பர் 6ம் தேதி முதல் 27 நாட்களுக்கு டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் அலுவலர்கள் மூலம் அளிக்கப்படும். பயிற்சியானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பின்னர் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை என இரு வகுப்புகளாக நடத்தப்படும். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப காலை அல்லது மாலை வகுப்பில் கலந்துகொள்ளலாம். இப்பயிற்சி பெறுபவர்கள் பிபிஓ துறையில் தங்கள் திறமைக்கேற்ப பணியிடங்களை தேடிக்கொள்ள முடியும். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு 9943088022 மற்றும் 7373003579 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த அரியவாய்ப்பை தகுதியுடைய பட்டதாரி இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி


0 comments