நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளை பயிர்க் கடனுக்காக வங்கிகள் அலைகழிக்க கூடாது பெரம்பலூர் கலெக்டர் அறிவுரை!
பெரம்பலூர், நவ. 1:
நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளை பயிர்க் கடனுக்காக அலைகழிக்க கூடாது என்று வங்கியாளர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது அறிவுரை கூறினார். அதே வேளையில் விவசாயிகளுக்கு ரூ3 கோடிக்கு மேலாக பயிர்க்கடன் வழங்கிய வங்கியாளர்களை பாராட்டினார்.
பெரம்பலூரில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் தரேஸ் அஹமது தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) கனகசபை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா உள் ளிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட அளவில் பல்வேறு கிராமங்களில், வேளாண் துறை, வருவாய்த் துறை ஆகியன வங்கியாளர்களுடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய விவசாய பயிர்க் கடன் வழங்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்தும், ஏற்கப்பட்ட மனுக்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள், விவசாயிகளுக்கான பயிர்க்கடன்களை வழங்காமல் வங்கிகள் இழுத்தடித்து வருதாகவும், வங்கிக்குச் செல்லும் விவசாயிகளை வங்கியாளர்கள் மரியாதையின்றி அவமதித்துப் பேசுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, கடன் மேளா மூலம் வங்கியாளர்கள் அளித்த கடன் விவரங்களையும் முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளை பயிர்க்கடனுக்காக அலைகழிக்க கூடாது என்றார்.
இதுதொடர்பாக வங்கியாளர்களிடம் அவர் பேசியதாவது:
வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்காக விவசாயிகள் கடனுதவி கோரி வங்கிகளை நாடி வருகின்றனர். அவ்வாறு பயிர்க்கடன் கோரி விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை வங்கிகள் கண்டுகொள்ளாமலும், பயிர்க் கடன் வழங்காமலும், காலம் தாழ்த்துவதும் கூடாது. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை அலைகழிக்காமல் பயிர்க்கடன்கள் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என்றார். அதே வேளையில், குறிப்பிட்ட சில வங்கிகள் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்களை விரைந்து வழங்கியதை கலெக்டர் பாராட்டினார்.
குறிப்பாக, விவசாயிகளுக்கு அதிகப்படியாக ரூ3.80 கோடி மதிப்பீட்டில் பயிர்க் கடன்களை வழங்கிய வாலிகண்டபுரம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு பாராட்டு தெரிவித்தார். அதேபோல அதிகப்படியான பயிர்க் கடன்களை வழங்கிய இந்தியன் வங்கிக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.கே. ராஜேந்திரன், வேப்பந்தட்டை வட்டச் செயலாளர் ரமேஷ், பெரம்பலூரைச் சேர்ந்த கருணாநிதி மற்றும் வங்கியாளர்கள், வேளாண் துறை அலுவலர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக, முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் சந்திரசேகர் வரவேற்றார்.
Category: மாவட்ட செய்தி


0 comments