ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தினமும் 60 பேருக்கு அனுமதி திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் தகவல்
திருச்சி,
ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தினமும் 60 பேருக்கு அனுமதி வழங்கப்படும் என்று திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறி உள்ளார்.
பாஸ்போர்ட் சேவை மையம்
இது தொடர்பாக திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி கே.பாலமுருகன் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் கீழ் திருச்சியிலும், தஞ்சாவூரிலும் தலா ஒரு பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் (பாஸ்போர்ட்டு சேவா கேந்திரா) செயல்பட்டு வருகின்றன. பாஸ்போர்ட்டு விண்ணப்பதாரர்கள் இந்த அலுவலகங்களின் மூலம் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வருகிறார்கள்.
திருச்சி பாஸ்போர்ட்டு சேவை மையத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களும், தஞ்சாவூர் பாஸ்போர்ட்டு சேவை மையத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்து வருகிறார்கள்.
திருச்சிக்கு மாற்றம்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தஞ்சாவூரை விட திருச்சி சேவை மையம் தான் தொடர்புக்கு வசதியாக இருக்கும். எனவே தங்களது மாவட்டத்தை திருச்சி பாஸ்போர்ட்டு மையத்துடன் இணைக்கவேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி பாஸ்போர்ட்டு சேவை மையத்துடன் இணைக்கப்படுகிறது. வருகிற 18–11–2013 முதல் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் திருச்சி பாஸ்போர்ட்டு சேவை மையத்தில் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விதிமுறைகளில் மாற்றம்
மேலும் பாஸ்போர்ட்டு அலுவலக விதிமுறைகளிலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி இ.சி.ஆர் சான்றிதழ் தேவை என்பதை நீக்கம் செய்தல், பாஸ்போர்ட்டில் கணவன், அல்லது மனைவி பெயரை சேர்த்தல் அல்லது நீக்கம் செய்தல், விசா பக்கங்களில் திருத்தங்கள் செய்தல் ஆகிய தேவைகளுக்காக பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகுபவர்கள் இனி ஆன்லைன் மூலம் அப்பாயிண்ட்மெண்ட் பெற்ற பின்னரே வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மூத்த குடிமக்கள், குழந்தைகள், அரசு ஊழியர்களுக்கான சலுகைகளில் மாற்றம் கிடையாது.
புதிய விதிமுறைகளின்படி ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் தேவைப்படுவோருக்கு முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் திருச்சி பாஸ்போர்ட் சேவை மையத்தில் தினமும் 60 பேருக்கும், தஞ்சாவூர் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு தினமும் 100 பேர் என்ற அடிப்படையில் அப்பாயிண்ட்மெண்ட் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Category: மாநில செய்தி


0 comments