உ.பி யில் நடந்த மத கலவரத்திற்கு இது தான் காரணம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் முஸாஃபர் நகர் எனும் பகுதியில் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் கிண்டல் செய்ததால்,கோபமுற்ற பெண்ணின் சகோதரரும், அவரது உறவினரும் கிண்டல் செய்த வாலிபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தவே, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமுற்ற முஸ்லிம்கள் தரப்பு அந்த வாலிபரைத் தாக்கிக் கொலை செய்த இருவர் மீதும் எதிர் தாக்குதல் நடத்திப் படுகொலை செய்தது.
ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்ற இந்த மூன்று படுகொலைகளிலும் அப்பகுதிக் காவல்துறை இரு தரப்பினர் மீதான குற்றங்களின் அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கவே, கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த சங்பரிவார் பொய்யான தகவல்களைப் பரப்பி சரியாகப் பற்ற வைத்ததைத் தொடர்ந்து கொழுந்து விட்டெரிந்த கலவரத்துக்கு முப்பதுக்கும் மேற்பட்டோர் அநியாயமாகப் பலியாகியுள்ளனர். கலவரம் மேலும் பல பகுதிகளுக்குப் பரவுவதைத் தொடர்ந்து பயத்துடன் மக்கள் தம் இருப்பிடங்களை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர். அவர்களைப் பாதுகாப்புடன் தங்க வைக்க உபி அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
ஆகஸ்ட் 27 அன்று தங்கள் சமூகத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப் பட்ட நிலையில், 40000 பேர் கூடிய ஜாட் மகா பஞ்சாயத்தில் பாகிஸ்தான் சியால்கோட்டில் இரு வருடங்களுக்கு முன்னர் போதை பொருள் கடத்தியதற்காக அடித்து கொல்லப் பட்ட இருவர் சம்பந்தப் பட்ட காட்சிகளை எடிட் செய்து சி டி வடிவில் சங்பரிவாரத்தினர் விநியோகித்துள்ளனர். மேலும் முகநூல் பக்கத்திலும் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.போலி வீடியோ மூலமே கலவரம் பெரிய அளவில் வலுப் பெற்றதாக, உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர். மேலும் குறிப்பிட்ட அந்த பாகிஸ்தான் வீடியோவை யூ டியூப் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கி, ஆகஸ்ட் 27 இல் கொல்லப்பட்ட இருவரின் வீடியோ காட்சி எனப் பொய்யாக முக நூலில் பதிவிட்ட சிவராம் குமார் மற்றும் அதைப்பகிர்ந்து கொண்ட இரு பாஜக எம்.எல் ஏ க்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
காங்கிரஸ் அரசு மீது தினம்தோறும் பல்வேறு ஊழல் புகார்கள் கூறப் பட்டாலும் எதிர்க் கட்சியான பாஜகவும் ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியல்ல என்பதற்கு பாஜக ஆட்சியில் நடைபெற்ற சவப் பெட்டி ஊழல், கர்நாடகாவில் நடைபெற்ற சுரங்க ஊழல் ஆகியவையே போதுமான சாட்சி. அடானி குழுமத்துக்குக் குறைந்த விலைக்கு நிலம் தாரைவார்க்கப் பட்டது எனப் பல்வேறு ஊழல்கள் மூடி மறைக்கப் பட்டுள்ளன. தோண்டினால் காங்கிரசும் பாஜகவும் ஊழல் விசயத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் எனபது தெரிய வரும். மக்கள் பணத்தைச் சுரண்டும் தனியார்கள், தனியார்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களை வளர்த்து விடும் அரசியல்வாதிகள் என, பெரும்பான்மையான இந்திய அரசியலே ஊழலில் திளைத்துள்ள நிலையில் அரசியல்வாதிகளால் இனி தங்கள் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்க முடியாத நிலை. எளிதாக மக்களின் வாக்குகளைப் பெறும் தந்திரமே வெள்ளையன் கண்டுபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சி! வெள்ளையனின் பிரித்தாளும் சூழ்ச்சியையே பாஜக கையிலெடுத்துக் கொண்டு மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற முனைப்போடு இறங்கியுள்ளது.
அதன் முதல் திட்டமாகவே வி ஹெச் பி மூலம் ராமர் கோவில் விசயத்தை மீண்டும் மேலெழுப்பி பரிக்கிரமா யாத்திரையைக் கையில் எடுத்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவுகள் வி ஹெச் பியின் பரிக்கிரமா யாத்திரைக்கு முட்டுக் கட்டை போட்டன. மேலும் வி ஹெச் பி யின் பரிக்கிரமா அரசியலை ஹிந்து தலைவர்களில் பலரே விரும்ப வில்லை. பரிக்கிரமா அரசியல் சதித் திட்டம் தோல்வியைத் தழுவவே, தற்போது உபியில் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாஜக சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.குஜராத்தில் நடைபெற்ற சொஹ்ராபுதீன் ஷேக், ஜமால், இஷ்ரத் ஜஹான், பிரஜாபதி எனப் பல்வேறு போலி என்கவுண்டர்களில் தொடர்புடைய, கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள, நரேந்திரமோடியின் வலது கையாகக் கருதப் படும் அமித் ஷா உத்தரப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப் பட்ட போதே உ பி யில் பாஜக செயல்படுத்தப் போகும் திட்டம் பலருக்கும் தெரிந்து விட்டது. பாஜகவும், சமாஜ்வாடியும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கும் நிலையில், கலவரத்தின் பலனைப் பங்குபோட்டுக் கொள்ள காங்கிரசும் பகுஜன் சமாஜ் கட்சியும் வரிசையில் நிற்கின்றன.
போலி என்கவுண்டர் வழக்குகளில் கைது செய்யப் பட்டு, கடந்த 7 ஆண்டுகளாகச் சிறையிலடைக்கப்பட்டுள்ள குஜராத் காவல்துறை அதிகாரி வன்சாரா குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது சகாவான அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து போலி என்கவுண்டர்களில் இருவரின் நேரடிப் பார்வையில் தான் குஜராத் காவல்துறை செயல்பட்டது என்றும் அதற்காக 32 காவல்துறையினர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள நிலையில், தாங்கள் செய்தது தவறு என்றால் தங்களை இயக்கிய குஜராத் அரசும் சபர்மதி சிறை வளாகத்தில் தான் இயங்க வேண்டும் என்று தமது 10 பக்க ராஜினாமா கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.
வன்சாராவின் ராஜினாமா கடிதம் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தி குஜராத் அரசுக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், வன்சாராவின் ராஜினாமா கடிதத்தை மக்கள் மனதில் இருந்து அகற்றும் பாஜகவின் சூழ்ச்சியாகவே ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்ற கொலைகளுக்கு சுமார் 10 நாட்களுக்குப் பிறகு இக் கலவரம் சங்பரிவாரத்தால் கட்டமைக்கப் பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுவதும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது.
சம்பவம் நடந்த தினத்திலேயே இரு தரப்பிலும் மூவர் கொலை செய்யப்பட்ட நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததைமீறி 40,000 பேர் கூடி பஞ்சாயத்து நடத்துவதற்கு அகிலேஷ் யாதவ் அரசு எப்படி அனுமதித்தது என்பது ஆச்சரியமான விசயம். எப்படியாயினும், அப்பஞ்சாயத்துப் பேரணியில் கலந்துகொண்ட பாஜக தலைவர்கள் வகுப்புக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியுள்ளதும் போலி வீடியோவைப் பரப்பி ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்தின் கோபக்கனலைக் கிளப்பி விட்டுள்ளதும் தெளிவாகியுள்ள நிலையில்,பாஜக ஆளும் மாநிலங்கள் இன்றிப் பிற மாநிலங்களிலும்தான் சிறுபான்மையினத்தவருக்குப் பாதுகாப்பில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி குஜராத் இனக்கலவரம் பற்றிய பேச்சுகளைக் குறைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயன்றுள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
THANKS:இந்நேரம்Category: சமுதாய செய்தி


0 comments