.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டம் – வேப்பூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!!

Unknown | 9:12 PM | 0 comments

தமிழ்நாட்டில், பெரம்பலூர் மாவட்டம் – வேப்பூர் உள்பட  புதிய 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
கிராமப்புற மாணவர்களுக்கு...
உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியினை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் பெறவேண்டும் என்பதே முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் உயரிய நோக்கமாகும். கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி சிரமப்படாமல் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி கற்பதற்கு ஏதுவாக தமிழக அரசு கல்லூரிகளைத் தொடங்கி வருகிறது.இதன்மூலம், கிராமப்புற மாணவ, மாணவியர் கல்வியில் இடைநிற்றலை தவிர்த்து, உயர்கல்வி கற்று நல்ல வேலைவாய்ப்புகள் பெற்றிடவும், அதன்மூலம் பொருளாதார நிலை உயர்ந்து வாழ்வில் சிறப்பான நிலையை அடைந்திடவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
14 புதிய கல்லூரிகள்
கிராமப்புற மாணவ, மாணவியர் உயர்கல்வியினைத் தொடர்ந்து கற்கவேண்டும் என்ற நோக்கில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 22 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதல்–அமைச்சரால் தொடங்கப்பட்டு, பெருமளவிலான கிராமப்புற மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். இத்தகைய பயனுடைய உயர்கல்வி வசதியை கிராமப்புற மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து வழங்கிடும் நோக்கில், நடப்பாண்டில் மேலும் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் – கறம்பக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் – பேராவூரணி, திருப்பூர் மாவட்டம் – காங்கேயம், நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம், தர்மபுரி மாவட்டம் – காரிமங்கலம் (மகளிர்), கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூர், காஞ்சீபுரம் மாவட்டம் –உத்திரமேரூர், தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் – கடலாடி, திருவாடணை, முதுகுளத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் –சிவகாசி ஆகிய 12 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 
பெரம்பலூர் மாவட்டம் – வேப்பூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் கடலூர் மாவட்டம் – திட்டக்குடியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என மொத்தம் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
ஆசிரியர் பணியிடங்கள்
இந்த 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் 210 ஆசிரியர் பணியிடங்களும், 238 ஆசிரியரல்லா பிற பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மேலும், பணியாளர் சம்பளம், அலுவலக செலவினம் ஆகியவற்றிற்கும் மற்றும் கணினிகள், அறைகலன்கள், புத்தகங்கள், கருவிகள் போன்றவை கொள்முதல் செய்வதற்கும் ரூ.17 கோடியே 9 லட்சத்து 94 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளுக்கு ரூ.105 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தரக் கட்டிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதற்கட்டமாக பி.ஏ., (ஆங்கிலம்), பி.ஏ., (தமிழ்), பி.காம்., பி.எஸ்சி., (கணிதம்) மற்றும் பி.எஸ்சி., (கணினி அறிவியல்) ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
ஜெயலலிதாவுக்கு நன்றி
இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவி எஸ்.பத்மாவதி மாணவ, மாணவியர் சார்பில் நன்றி தெரிவித்து பேசும்போது, ‘‘நான் பிளஸ்–2 முடித்து கல்லூரிக்கு செல்ல இயலாத ஏழ்மையான மாணவி. ஆனால், முதல்–அமைச்சரின் ஆசியினால் இன்று இங்கு தொடங்கிவைக்கப்பட்ட இந்த கல்லூரியில் நான் பி.ஏ., (ஆங்கிலம்) சேர்ந்துள்ளேன். இந்த கல்லூரி எனக்காகவே திறக்கப்பட்டதுபோல் நான் உணர்கிறேன். என்னைப் போன்று உள்ள பல ஏழ்மையான மாணவ, மாணவியர்களுக்கு இந்த கல்லூரி ஒரு அறிவுத் திருக்கோவில் போன்றது. மீண்டும் நாங்கள் படிப்போம் என்று நினைக்காத தருணத்தில், முதல்–அமைச்சர் கடவுள் போன்று உதவியுள்ளார். அனைத்து மாணவ, மாணவியர்களின் சார்பிலும் எனது பணிவான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், தொழில் துறை அமைச்சர் பி. தங்கமணி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 14 கலை அறிவியல் கல்லூரிகள்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா இக்கல்லூரியை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நேற்று துவக்கி வைத்ததை தொடர்ந்து வேப்பூரில் மாநில வேளாண் விற்பனை வாரிய தலைவர் ரவிச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது குத்துவிளக்கேற்றி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சகுந்தலா கோவிந்தன், துணை தலைவர் சேகர், யூனியன் சேர்மன்கள் கிருஷ்ணகுமார், மருதைராஜா, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மாலதிசேகர், குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி முதல்வர் சத்தியன், பி.டி.ஓ.,க்கள் பாரதிதாசன், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1