சென்னை விமான நிலையத்தில் 6–வது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு!
சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் 6–வது முறையாக மீண்டும் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் ரூ.2015 கோடி செலவில் கட்டப்பட்டது. இதை இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கடந்த ஜனவரி மாதம் திறந்து வைத்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் உள்நாட்டு முனையம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த முனையத்தில் மேல் தளத்தில் புறப்பாடு பகுதியும், கீழ் தளத்தில் வருகை பகுதியும் செயல்படுகிறது.
மேற்கூரை விழுந்தது
உள்நாட்டு முனையத்தின் பழைய வருகை பகுதியில் கேட் எண் 7–க்கும், 8–க்கும் இடையே உள்ள மேற்கூரை சுமார் 50 சதுர அடி அளவில் நேற்று காலை 9.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. பயங்கர சத்தத்துடன் விழுந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து பார்த்தனர்.
மேற்கூரை விழுந்த போது பயணிகள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சுமார் 15 நிமிடங்கள் கழித்து மேற்கூரை விழுந்து இருந்தால் டெல்லியில் இருந்து வந்த பயணிகள் மீது விழுந்து இருக்கும். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
6–வது முறை
கடந்த 2 மாதங்களில் சென்னை விமான நிலையத்தில் 5 முறை மேற்கூரை இடிந்து விழுந்து உள்ளது. தற்போது 6–வது முறையாக நேற்றும் மேற்கூரை விழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் விமான நிலையத்தில் பயன்படுத்தப்பட்டவை தரமான பொருட்கள் தானா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என விமான பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Category: மாநில செய்தி


0 comments